Skip to main content

அக்காவைக் கொன்றுவிட்டு, குத்தாட்டம் போட்ட தங்கை; காப்பு மாட்டிய போலீஸ் 

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

 police arrested the sister who incident her sister

 

சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்கிற ராஜேஸ்வரி. 34 வயதான இவர், சென்னை பார்க் டவுன் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் இருந்த நிலையில், அதில் இரண்டு பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இத்தகைய நிர்க்கதியில் தள்ளப்பட்ட ராஜேஸ்வரி தற்போது வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு, தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.  

 

இத்தகைய சூழலில், கடந்த 19 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ராஜேஸ்வரி எக்மோரில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் சமோசா வியாபாரம் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜேஸ்வரி, அடுத்த பெட்டிக்குச் செல்வதற்காக பிளாட்பாரத்தில் நடந்து வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜேஸ்வரியைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் சிக்கிய ராஜேஸ்வரி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தபோது அவரை அந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிவிட்டு, அதே ரயிலில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.

 

இதில் ராஜேஸ்வரி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அந்த இடத்தில இருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, அங்கிருந்த சில பயணிகளின் உதவியோடு  படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரம், ஆள்நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், சென்னை மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில், ராஜேஸ்வரிக்கு நான்கு கணவர்கள் என்பதால், இந்தக் கொலையில் துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இத்தகைய சூழலில், போலீசாரின் சந்தேகம் ராஜேஸ்வரியின் தங்கையான நாகவள்ளி மீது திரும்பியது. 

 

அப்போது, நாகவள்ளி குறித்து போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் இந்தக் கொலைக்கு மாஸ்டர் மைண்ட்டாக செயல்பட்டதே நாகவள்ளிதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜேஸ்வரியின் தங்கையான நாகவள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இது, அவரது அக்காவான ராஜேஸ்வரிக்குத் தெரிய வரவே, நாகவள்ளியைக் கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்கையின் ஆண் நண்பரான சக்திவேலையும் மிரட்டியுள்ளார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத நாகவள்ளி தனது ஆண் நண்பருடன் தொடர்ந்து பழகிவந்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில், ராஜேஸ்வரி மீது ஆத்திரமடைந்த நாகவள்ளி அவரைக் கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தனது ஆண் நண்பரான சக்திவேலையும் தூண்டிவிட்டுள்ளார். அதன்படி, சக்திவேல் தனது கூட்டாளிகளை அழைத்து வந்து, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து ராஜேஸ்வரியை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து, நாகவள்ளியைக் கைது செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது தனது அக்கா ராஜேஸ்வரியின் சடலம் முன்பு நாகவள்ளி குத்தாட்டம் போட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே, ஆடி முடித்துக் களைப்பில் இருந்த நாகவள்ளியைப் போலீசார் அந்த இடத்திலேயே கைது செய்தனர். அதோடு நாகவள்ளியின் ஆண் நண்பரான சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, ஜெகதீசன் மற்றும் ஜான்சன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். அதே சமயம், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த அக்காவை, சொந்தத் தங்கையே கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.