Skip to main content

இளைஞரை கடத்தி வன்கொடுமை செய்த கும்பல்! திருச்சியில் பரபரப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Police arrested 5 people who misbehaved with the youth

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந்த தென்காசியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் வந்த துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த வசந்த்(24) என்ற வாலிபர் அவரை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று இருங்களூர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டுக்கு அவரை அழைத்து சென்றார்.

அங்கு கஞ்சா, மதுபோதையில் இருந்த திருவானைக்காவல் கவியரசன் (வயது 19), யுவராஜ்(22), அய்யனார் (20) மற்றும் துவாக்குடியைச் சேர்ந்த ரவி போஸ்கோ (28) ஆகியோர் ஓரின சேர்க்கையில் ஈடுபடும்படி காளிராஜை கட்டாயப்படுத்தி உள்ளனர். அதற்கு மறுக்கவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்து சென்று, நிர்வாணமாக்கி, சேலை மற்றும் நைட்டி கட்டச் சொல்லி 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் காளிராஜை நெடுஞ்சாலையில் கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றுள்ளனர். மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு சாலையில் மயங்கி கிடந்தவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சமயபுரம் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் காளிராஜிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய நண்பரின் தம்பி விபத்தில் சிக்கி காயமடைந்ததால் திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக வந்து, அவரை பார்த்துவிட்டு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் திருச்சி செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது வாலிபர் ஒருவர் தன்னை திருச்சிக்கு அழைத்து சென்றதாகவும், அவர்கள் தன்னை தாக்கி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் சமயபுரம் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். அப்போது போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பிக்க முயற்சித்த வசந்த், ரவி போஸ்கோ ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் 5 பேரும் பிரபல ரவுடி பாட்டில் மணியின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மிக கொடூரமான முறையில் அட்ராசிட்டி செய்து வந்ததுடன், வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் திருநங்கை ஒருவரை பிடித்து அடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வீடியோவையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.