Skip to main content

“பாட்டாளி சொந்தங்களே... தமிழைக் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம்..” - ராமதாஸ்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

PMK Founder Ramadoss request traders for Tamil Language

 

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘தமிழைத் தேடி..’ எனும் பயணத்தை சென்னை முதல் மதுரை வரை நடத்தினார். இந்நிலையில் ராமதாஸ், தமிழைத் தேடி திட்டத்தில் அடுத்ததாக செய்ய வேண்டியவை குறித்து வணிகர்களுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார். 

 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது; உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் நாள் சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28ஆம் நாள் மதுரையில் நிறைவு செய்த ‘தமிழைத் தேடி...’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் தமிழ்கூறும் நல்லுலகில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்தேனோ, அதை விட பல மடங்கு ஆக்கப்பூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அன்னைத் தமிழைக் காப்பதற்காக நமக்கு நாமே நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இலக்கு என்பது மிகப்பெரியது என்பதால், இதுவரை அடைந்த வெற்றிகளை நினைத்து ஓய்வெடுக்க நேரமில்லை. எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்ற நமது இலக்கின் அடுத்தடுத்த எல்லைக்கற்களை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. அதுகுறித்து நினைவூட்டுவதற்கே இந்த மடல்.

 

சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டு நாள்கள் பயணம் மேற்கொள்வதால் மட்டுமே அனைத்தும் சரியாகி விடும் என்ற மூட நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டிய தேவை உள்ளது; அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பாலானவை தமிழ் இல்லை என்பதையே தமிழ்மக்கள் இன்னும் உணரவில்லை; தனித்தமிழ்ச் சொற்கள் எவை? என்பதே நம்மில் பலருக்கு தெரியவில்லை; தனித்தமிழில் உரையாடுவது தகுதிக்குறைவு அல்ல... மாறாக அதுவே தனித்தகுதி என்பன உள்ளிட்ட உண்மைகளை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பது தான் எனது பயணத்தின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, நாம் பயன்படுத்துவது தமிழ் அல்ல.... தனித்தமிழ் பயன்பாட்டை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழைத்தேடி பயணத்திற்கு இதைவிட வேறு என்ன வெற்றி தேவை?

 

அடுத்தக்கட்டமாக நாம் செய்ய வேண்டிய பணிகள் மூன்று உள்ளன. அவற்றை முழு மனதுடன் செய்து முடிப்பது தான் அன்னைத் தமிழுக்கு நாம் செய்ய வேண்டிய முதன்மையான பணி ஆகும்.

 

முதல்கட்டமாக மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும் தமிழைத்தேடி இயக்கத்திற்கு பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை வாயிலாக நடத்தப்படும் தமிழைத்தேடி இயக்கம் அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி இருக்கிறேன். இந்த இயக்கம் தொடர்ந்து அரசியல் சார்பற்றதாகவே செயல்படும். அதற்கேற்ற வகையில், தமிழைத்தேடி இயக்கத்திற்கு ஒவ்வொரு நிலையிலும் 10 பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்களாகவும், தமிழைப் பரப்புபவர்களாகவும் இருக்க வேண்டும்.

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அன்னைத் தமிழ் மீதான நமது பற்று எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளே சான்று. 99 விழுக்காடு கடைகளின் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும், பிறமொழிச் சொற்களிலுமே எழுதப்பட்டிருக்கின்றன. இதை வணிகர்களின் குற்றமாகக் கருத முடியாது. மாறாக, எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழிச் சொற்கள் என்ற வேறுபாட்டை அவர்கள் அறியாதது தான் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்படாததற்கு காரணம் ஆகும்.

 

இவற்றையெல்லாம் விளக்கி வணிகர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். வணிகர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கும் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வெகுவிரைவில், 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் நாள் தமிழ்நாடு அரசு பிறப்பித்த 575 எண் கொண்ட அரசாணையில் இடம்பெற்றுள்ள கூறுகளின் அடிப்படையில் பெயர்ப்பலகைகளை மாற்றி அமைக்க வணிகர் சங்க பொறுப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறிப்பிடப்பட வேண்டிய முன்னேற்றம் ஆகும்.

 

அடுத்தக்கட்டமாக, கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்ற வேண்டியதன் தேவையை ஒவ்வொரு வணிகரும் உணரச் செய்ய வேண்டும். அந்தப் பணியை நீங்கள் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வணிகர்களுக்கு வழங்குவதற்கான துண்டறிக்கை கட்சித் தலைமையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூருக்கு தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டு, ஒவ்வொரு கடைக்கும் சென்று வழங்க வேண்டும்; பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டியதன் தேவை பற்றி விளக்க வேண்டும். அது குறித்த விவரங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

 

மூன்றாவதாக, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழிக் கலப்புச் சொற்கள் என்பதை நமது மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே, கடந்த 20.03.2005-ஆம் நாளில் சென்னையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பிறமொழிக் கலப்புச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை தெரிவிக்கும் பலகைகளை நாம் அமைத்தோம். இப்போது அந்த பணியை நாம் மீண்டும் செய்ய வேண்டியுள்ளது. தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் அத்தகைய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பலகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும். அந்த பலகைகளின் திறப்பு நிகழ்வை அனைவரும் அறியும் வகையில் எளிதாக நடத்த வேண்டும். இயன்ற இடங்களுக்கு நானே நேரில் வந்து பலகைகளைத் திறந்து வைக்க அணியமாக இருக்கிறேன்.

 

பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு வழங்கியுள்ள இந்த 3 பணிகளும் மிகவும் எளிமையானவை. நீங்கள் செய்யும் இந்த பணிகள் தமிழன்னைக்கு செய்யும் தொண்டு ஆகும். இந்தப் பணியை நீங்கள் செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்; உங்களை வெகுவாக பாராட்டுவேன். நீங்கள் செய்யும் இந்த பணி, தமிழைத் தேடி பயணத்தால் எனக்கு ஏற்பட்ட களைப்பை போக்கும். ஆகவே, பாட்டாளி சொந்தங்களே... அனைவரும் ஒன்றுபடுவோம், அன்னைத் தமிழைக் காக்கும் பணியைச் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.