Skip to main content

பாமக வேட்பாளர்களின் உத்தேசப்பட்டிலை சொன்ன ப.சிதம்பரம்

Published on 23/02/2019 | Edited on 25/02/2019


 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
 

அப்போது அவர், அதிமுக யார் தொடங்கியது என்று இன்னும் 15 ஆண்டுகள் கழித்து கேட்டால் ஒருவேளை அவர்கள் சசிகலா என்று சொன்னாலும் சொல்லலாம். அவர்கள் திராவிட கொள்கைகளை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. திராவிட கொள்கைகளை அவர்கள் பேசுவதே கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் எம்.ஜி.ஆரை நினைவில் கொள்வார்கள். அண்ணாவை மறந்துவிட்டார்கள். பெரியாரை மறந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதிமுக, இன்று பாஜக என்ற விஷ விருட்சகம் வளருவதற்கு துணையாக போகிறது என்றால் இதைவிட திராவிட இயக்கத்திற்கு செய்யக்கூடிய துரோகம் இருக்க முடியாது. அந்த துரோகத்தைத்தான் இன்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு பாமக துணைபோவதுதான் அதைவிட கேவலமான ஒன்று. 

 

p chidambaram


பத்திரிகைகளில் செய்தி வந்தது. தமிழக அமைச்சர்கள் மீது 206 பக்கம் ஊழல் பட்டியல். ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்று படித்தால் கூட 206 நாள் ஆகும். அதிமுக அரசுக்கு எதிராக, தமிழக அமைச்சர்கள் மீது 206 பக்கம் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார்கள். யார் வழங்கினார்கள். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உடன் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, துணைப்பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் க.பாலு உள்ளிட்டோர் வழங்கினார்கள். எனக்கு தெரிந்தவரைக்கும் இந்த நான்கு பேரும் தேர்தலில் நிற்கப்போகிறார்கள். 
 

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. இதையெல்லாம் அந்த நேரத்தில் பேச்சுக்காக சொல்கிறார்கள் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் இன்று ஒரு மதம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு எண்ணம், ஒரு சிந்தனை, ஒரு பாடமுறை, ஒரு உணவு பழக்கம், ஒரு உடை பழக்கம் என்று ஒரே கருத்தை பல கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் திணிப்பதற்கு ஒரு கட்சி முயற்சி செய்கிறது என்றால் அதற்கு எப்படி இவர்கள் துணை போகலாம். 
 

இந்தியாவில் ஒரே ஒரு மொழிதான், அது இந்தி என்றால், இந்தியாவில் ஒரே ஒரு மதம்தான், அது இந்து மதம் என்றால், இந்தியாவில் எல்லோரும் ஒரே உடை பழக்க வழக்கம், உணவு பழக்க வழக்கம் என்றால், ஆணும் - பெண்ணும் கைகோர்த்துக்கொண்டு பூங்காவில் கைக்கோர்த்து நடைபோட முடியாது என்றால் அது எப்படி இந்தியாவாக இருக்க முடியும். பாஜகவுக்கு இந்தியாவில் எங்கே வரவேற்பு இருந்தாலும், தமிழக மண்ணில் வரவேற்பு இருக்க முடியாது. இவ்வாறு பேசினார். 
 


 

சார்ந்த செய்திகள்