Skip to main content

கோவிலுக்குச் சொந்தமான இடத்தை அபகரித்த கும்பல்; அதிரடி நடவடிக்கையில் கலெக்டர்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Petition to the Collector for confiscating the land belonging to the temple

திண்டுக்கல்லில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கொண்டதாக மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஒரு புகார் மனுவை கொடுத்து இருக்கிறார்.

அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டம், ஒருதட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு உத்தமநாச்சியப்பன் திருக்கோவில் பக்தர் நான். இந்தத் திருக்கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவேன். மேலும் என்னைப் போல் பல நபர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் 12.01.2024 ஆம் தேதியன்று  உத்தமநாச்சியப்பன் திருக்கோவிலுக்கு வழிபட சென்ற போது அங்கிருந்த சிலர்  திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் விற்பனைக்காக உள்ளது என்றும், அதனை வாங்குவதற்கு யாரேனும் இருந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு  கோவிலின் பூசாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் கூறிய போது, அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அது தொடர்பானவற்றை அருகாமையில் விசாரித்த போது,  உத்தமநாச்சியப்பன் திருக்கோவிலுக்கு பாப்தியப்பட்ட சர்வே எண்: 44/6ல் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஒருதட்டு கிராமத்தில் 0.97.00 ஏர்ஸ் இடம் உள்ளது.

இந்த இடம் ஆதியிலிருந்தே உத்தமநாச்சியப்பன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்டு  திருக்கோவில் பூசாரிகள் என்ற பெயரில் ஆதியில் பட்டாவும் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் வரக்கூடிய வருமானத்தை வைத்தே திருக்கோவிலுக்கு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தது என்றும் தெரிந்தது.

பின் அது தொடர்பான அரசு வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களை பார்த்த போது மேற்படி கட்டிமானது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் வட்ட பட்டா எண்: 2178-இன் படி உத்தமநாச்சியப்பன் கோவில் பூசாரிகள், சுப்பைய மூப்பர் மகன் சடைய மூப்பர், சுப்பைய மூப்பர் மகன் நாகப்பன், சுப்பைய மூப்பர் மகன் கிட்ட மூப்பன், சுப்பைய மூப்பர் மகன் சின்னைய மூப்பன் ஆகியோர்கள் பெயரில் இருந்தது. இந்த நிலையில் அதனைக் கொண்டு மேற்படி கூட்டுப்பட்டாதாரர்களில் ஒருவரான சுப்பையா மூப்பர் மகன் சின்னையா மூப்பர் என்பவர் தனது மகன் செல்லத்துரை என்பவருக்கு பொதுவில் பிரிவினை இல்லாத 5இல் ஒரு பாகமான செண்டு 61 உள்ள இடத்தினை தான செட்டில்மெண்ட்டாக நிலக்கோட்டை சார்பதிவக ஆவண எண்:2587/2020- இன் படி கிரையம் கொடுத்தது போன்றும், அதனைக் கொண்டு செல்லதுரை என்பவர் அவரது வாரிசுதாரர்களான கேசவராஜா, பவானி ஆகியேர்களுடன் சேர்ந்து, நிலக்கோட்டை சார்பதிவக ஆவண எண்:3058/2020ன்படி திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் கணேஷ் பிரபு மற்றும் அவரது மனைவியும், அரசு ஆசிரியையுமான செல்வி ஆகியோர்களுக்கு கிரையம் கொடுத்தது போன்றும்,

அதே போன்று  காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ்பிரபு மற்றும் அவரது மனைவியும், அரசு ஆசிரியையுமான செல்வி ஆகியோர்கள் நிலக் கோட்டை சார் பதிவக ஆவண எண்: 81/2022 இன் படி மேற்படி செல்வியின் மாமனாரும், மேற்படி .கணேஷ்பிரபு அவர்களின் தகப்பனாருமான .பழனிசாமி என்பவருக்கு கிரையம் கொடுத்தது போன்றும், அதே போன்று மேற்படி சின்னையா மூப்பர் என்பவர் மேற்படி திருக்கோவிலுக்கு சொந்தமான 48 செண்டு இடத்தினை தனது மற்றொரு மகனான நாகராஜன் என்பவருக்கு நிலக்கோட்டை சார்பதிவக ஆவண எண்:80/20 22 இன் படி தான செட்டில் மெண்ட் மூலம் கொடுத்து அதனைக் கொண்டு மேற்படி நபர்கள் தங்களது பெயர்களை நிலக்கோட்டை வருவாய் வட்ட பட்டா எண்:5236ல் சேர்த்துள்ளது போன்று உள்ளது.

இதனைப் பார்க்கையில்  திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தினை, மேற்படி திருக்கோவிலின் பூசாரி என்கிற அடிப்படையில் சின்னையா மூப்பர் தனது மகன்களான செல்லதுரை மற்றும் நாகராஜன் ஆகியோர்களுக்கு, பதிவு அலுவலர் முன்பு தவறான தகவல்களை தெரிவித்து மோசடியாக பதிவு செய்துள்ளார். அதனைக்கொண்டு வருவாய்த்துறை ஆவணங்களிலும் அவர்களது பெயரையும் அதன் மூலம் கிரையம் பெற்றவர்கள் பெயரையும் சேர்த்துள்ளார். ஆகையால் கனம் சமூகம் ஐயா  போலியான ஆவணங்களைத் தயார் செய்து அதன் அடிப்படையில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்துள்ள மற்றும் அதனைப் பிறருக்கு விற்பனை செய்த மற்றும் தற்போது விற்பனை செய்ய முயற்சிக்கும் பழனிச்சாமி மீதும் தக்க கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

இந்தப் புகார் மனு சம்மந்தமாக அதிகாரிகள் மூலம் விசாரணை செய்யவும் மாவட்ட கலெக்டர் பூங்கொடி அதிரடி உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பகலில் அர்ச்சகர், இரவில் திருடன்; கோவில் நகை முதல் இருசக்கர வாகனம் வரை  திருட்டு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
priest stole everything from temple jewels to two-wheelers

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் சங்கராபுரம் நகரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொளத்தூர் சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கணியாமூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ராஜேஷ் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதும் வயிற்று பிழைப்பிற்காக சங்கராபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாசார் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரான ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜேஷ் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசாரின் தீவிர வாகனத்தை அணியின் காரணமாகவும் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மண்டை ஓட்டுடன் அகோரி; பயத்தில் மக்கள் - ஆண்மீக நகரில் அட்டகாசம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Aghori brought a skull to Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பெல்லாம் பௌர்ணமி நாட்களில் மட்டும்தான் லட்ச கணக்கான பக்தர்கள் வருவார்கள். அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றுவிட்டு ஊருக்கு செல்வார்கள். இப்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப்பாதை 24 மணி நேரமும் கிரிவல பக்தர்களால் நிறைந்துள்ளது.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்களைத் தாண்டி இப்போது வடஇந்தியாவின் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த தேவையான வசதிகள் இல்லாததால் நகரத்தின் முக்கிய சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் தினம், தினமும் நகரமே போக்குவரத்து பிரச்சனையால் சிக்கி தவிக்கிறது.

அப்படித்தான் ராஜகோபுரம் அருகே முருகர் தேர் பக்கத்தில் வித்தியாசமாக ஒரு கார் சாலை ஓரமே நிறுத்தி இருந்தது. முதலில் யாரோ நிறுத்திவிட்டு சென்றுயிருப்பார்கள் என நினைத்தனர், அந்த காரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த காரை எடுக்கச்சொல்லி வாகன ஓட்டிடம் சொல்வதற்கு காரின் முன்பக்கம் சென்றபோது அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

அப்போது காரின் முன்பக்க கண்ணாடி டேஸ்போர்டில் வரிசையாக மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டு இருந்தன. காரின் கண்ணாடி, பேனட் ஆகியவற்றில் டேஞ்சர் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கார் டோர், பின்பக்க கண்ணாடியில் நிர்வாண சாமியாரின் படங்கள், ஒட்டப்பட்டு உள்ளே என்ன இருப்பது என்னவென தெரியாமல் மறைத்திருந்தது. கார் யாருடையது எனப் பார்க்க வாகன எண்ணை பார்க்க தேடியபோது வாகன எண் இருக்கும் இடத்தில் அகோரி நாகசாது என்ற பெயர் பலகை தான் இருந்தது. காருக்குள் என்ன இருக்கிறது எனப்பார்க்க இன்னமும் அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். நகர காவல்நிலையத்தில் இருந்து போலிஸாரும், போக்குவரத்து போலிஸாரும் அங்கே வந்தனர்.

காவல்துறையினர் காரை கண்ணாடி வழியாக சோதித்துவிட்டு, காருக்குள் மண்டை ஓடுகள், முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் மீது எழுதியிருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அழைத்தனர். போலிஸ் அழைத்தும் சவகாசமாக ஒரு மணி நேரம் கழித்து கழுத்து நிறைய ருத்ராட்ச கொட்டையும், நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் வந்தவர் நான் தான் காரின் உரிமையாளர் என்றார். காசியில் அகோரிகள் இருப்பார்களே அப்படியிருந்தார்.

Aghori brought a skull to Tiruvannamalai

அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். காரில் இருந்து இறங்கி உள்ளே வா என அழைத்தபோது, எனக்குச் சட்டம் என்று எதுவும் கிடையாது, உங்க சட்டத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் பெயர் கடவுள். நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு எனக் கூறி தன் உடலில் இருந்த சில ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்த போலீசார், அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னையில் பதிவு செய்துயிருந்தது. உள்ளே நம்பர் பிளேட் இருந்தது. அதன்மீது தான் அகோரி என எழுதிய போர்டு தொங்கவிட்டிருந்ததைக் கண்டறிந்தனர். 


விசாரணையில், அவர் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், கார் பார்க்கிங் செய்ய இடம் ஏதும் இல்லாததால் சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார். திருவண்ணாமலைக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துவம் வகையில் செயல்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பாமல் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூபாய் 3000 அபராதம் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.