Skip to main content

மாவட்ட ஆட்சியரின் காலங்கடந்த உத்தரவு; செய்வதறியாது நிற்கும் கிராம மக்கள்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

people shocked by the late order of the District Collector

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி நகரம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், புள்ளாண்விடுதி, பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு உள்பட ஆலங்குடிக்குக் கிழக்கே உள்ள அனைத்து கிராமங்களிலும், அதே போல பேராவூரணி தொகுதியில் பைங்கால், ஆவணம், திருச்சிற்றம்பலம், களத்தூர், குருவிக்கரம்பை உள்பட ஏராளமான கிராமங்களிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வருடத்திற்கு ஒரு முறை ஆடி மாதத்தில் மொய் விருந்துகள் நடத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் வாங்கிய மொய்ப் பணத்தைத் திரும்பச் செய்யும் முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

இதனால்  காய்கறி, மளிகை, விறகு, சமையல், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. மொய் விருந்துகள் செய்து விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்வது, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவணி மாதமும் மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக கஜா புயல் பாதிப்பு, கரோனா ஊரடங்கு காரணமாக ஆடி மாத மொய் விருந்துகள் நடத்தப்படாமல் நூற்றுக்கணக்கானோர் கடனில் தத்தளிக்கின்றனர். இந்நிலையில், இந்த வருடம் ஆடி மாதம் பிறந்த போது மொய் விருந்துகள் நடத்துவது பற்றி எந்த அறிவிப்பும் வராத சூழலில், தற்போது சிலர் மொய் விருந்து பத்திரிக்கைகள் அச்சடித்து ஊரெங்கும் கொடுத்துவிட்டு விருந்து நடத்தத் தயாராக உள்ளனர். இந்த சூழலில், நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மொய் விருந்துகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

 

people shocked by the late order of the District Collector

 

இந்த அறிவிப்பால் மொய் விருந்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் தயாராக இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து மாங்காடு கிராமத்தில் மொய் விருந்துக்காகத் தயாராகி திடீரென ஆட்சியர் அறிவிப்பால் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளவர்கள் கூறும் போது, “ஆடி மாதம் பிறந்த போதே மொய் விருந்துகள் நடத்தத் தடை என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தால் யாரும் அதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திடீரென அறிவித்திருப்பதால் சில நாட்களில் மொய் விருந்து நடத்த பத்திரிக்கை கொடுத்துவிட்டு லட்சக்கணக்கில் கடன் வாங்கி முன் ஏற்பாடுகளுக்காகச் செலவு செய்துள்ள நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாக தடை என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. மொய் விருந்து பத்திரிக்கைகளை வெளியில் கொடுத்துள்ளவர்களுக்கு அனுமதி அளித்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மொய் விருந்துகளை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிர்க்க விசாலமான சாப்பாடு மற்றும் மொய் பந்தல் அமைத்துள்ளனர். கிருமிநாசினி, மாஸ்க் வைக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இருப்பினும், வேறு வழி இல்லாததால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சிகளை ரத்து செய்கிறோம். ஆனால் மீண்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மொய் விருந்துகள் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.