Skip to main content

“புத்தகப் பை வைக்கக் கூட இடமில்லை.. எப்படி படிக்க அனுப்புவது” - அரசுப் பள்ளியில் பெற்றோர்கள் போராட்டம்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

Parents struggle government school pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 100 பள்ளிகளிலும், திருவரங்குளம் ஒன்றியத்தில் 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளிலும் பழுதான; ஆபத்தான கட்டடங்களில் வகுப்புகள் நடக்கின்றன. கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், பல பள்ளிகள் கட்டடம் இல்லாமல் மரத்தடிகளிலும் சமுதாயக் கூடங்களிலும் நடத்தப்படுகின்றன. இந்த பழுதான கட்டடங்களை அகற்றி புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துள்ளது.

 

இந்த வகையில், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1900ம் ஆண்டு திண்ணைப் பள்ளிக்கூடமாக தொடங்கி 1937ம் ஆண்டு கட்டடத்தில் நடத்தப்பட்டது. சுமார் 123 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளியில் சுமார் 80 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் அங்கன்வாடிக்காக கட்டப்பட்ட உணவு உண்ணும் கூடத்தை பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறையாக மாற்றிக் கொண்டு அங்கன்வாடியை சமுதாயக் கூடத்திற்கு மாற்றி செயல்படுத்தி வருகின்றனர்.

 

போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் அமர நெருக்கடி ஏற்பட்டதால் மாணவர்களின் புத்தகப் பைகளை வெளியில் வைத்துவிட்டே வகுப்புகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடம்; பழைய பழுதான ஆபத்தான கட்டடங்களை அகற்ற வேண்டும்; நாய் தொல்லையிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற சுற்றுச்சுவர் வேண்டும்; கூடுதல் ஆசிரியர் வேண்டும் என்று பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பல வருடமாக வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் இன்று பள்ளி வளாகத்தில் ஒன்று திரண்டனர்.

 

Parents struggle government school pudukkottai

 

எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் மரத்தடியில் அமர வைத்து தாங்களும் அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகம், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், வட்டாட்சியர் செந்தில் நாயகி, துணை வட்டாட்சியர் பழனியப்பன் உள்பட பல அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.