Skip to main content

பெண் பஞ்சாயத்துத் தலைவரைக் கண்டித்துத் துணைத் தலைவர் 'தர்ணா'!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Panchayat Deputy Leader near Chidambaram condemning the panchayat administration

 

சிதம்பரம் அருகே சின்னகாரமேடு, பெரியகாரமேடு, வீரன்கோவில் திட்டு ஆகிய கிராமப் பகுதிகளைக் கொண்டது கீழத்திருக்கழிபாலை ஊராட்சி. இதில் துணைத்தலைவராக உள்ளவர் லட்சுமணன்.

 

இவர் வெள்ளிக்கிழமையன்று வீரன்கோவில் திட்டிலுள்ள, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் ஊராட்சி நிர்வாகச் செயல்பாட்டைக் கண்டித்தும், ஊராட்சி அலுவலகம் முறையாக திறக்கப்படாதது மற்றும் அலுவலகத்திற்கு சரிவர வராத ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்தும் தர்ணா போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். 

 

மேலும், இந்தப் போராட்டத்தில், குடிநீர்ப் பிரச்சனை, வீட்டு வரிக்கு ரசீது கொடுக்காதது உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து, 30 நிமிடம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சுபாதினி விமல்ராஜிடம் கேட்டபோது, "இந்தமுறை இடஒதுக்கீடு அடிப்படையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த என்னை மக்கள் தலைவராகத் தேர்வு செய்துள்ளனர். மிகவும் பிற்பட்ட சமூகமான லட்சுமணன், அவருக்குச் சாதகமானவரை தேர்தலில் நிற்க வைத்தார். அவர் தோல்வியுற்றார். பின்னர் இவர் துணைத் தலைவராக தேர்வு பெற்றார். அதிலிருந்து காழ்ப்புணர்ச்சி மற்றும் சாதிய எண்ணத்துடன் நடந்துகொள்கிறார். அவர் சொல்கிற அனைத்துக் குற்றங்களும் தவறானது.
 

ஊராட்சி நிர்வாகத்தை தான்தான் நடத்துவேன் என்கிறார். மேலும் அவரின் உறவினர்கள் மற்றும் வேண்டியவர்களைப் பணியாளராகப் போடவேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். ஒவ்வொரு கையெழுத்திற்கும் கமிஷன் கேட்கிறார். அப்படி இல்லையென்றால், 'நீங்க செய்த பணிகளை, நான் ஆய்வு செய்துவிட்டுத்தான் கையெழுத்துப் போடுவேன். உங்க இஷ்டத்துக்குப் போடமுடியாது என்றதுடன், அவர் குடியிருக்கும் விரன்கோவில்திட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு, அவர்தான் எல்லாத்தையும் செய்யவேண்டும். தலைவர் வரக்கூடாது' என்கிறார்.

 

தற்போது ஒரு ஊராட்சியில் 10 குடும்பங்களுக்கு கோழி கொடுக்கும் திட்டத்தில் வீரன்கோவில்திட்டு பகுதியில் உள்ள 7 குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். இவர் இப்படிச் செய்தால் மீதியுள்ள, ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு என்ன பதில் சொல்வது?. ஊராட்சி தலைவர் ஆதிதிராவிட பெண் என்பதால் அவருக்கு இணையாக எப்படி அமர்வது என்ற கீழ்த்தரமான சிந்தனையுடன் செயல்படுகிறார். 100 நாள் வேலை செய்யும் ஊழியர்களை அமரவைத்துக் கொண்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்படுகிறார். பி.டி.ஓ அனுமதி பெற்று நானும் பத்திரிகையாளர்களை விரைவில் சந்திக்கிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.