Skip to main content

“எனது மகன் வீட்டை அபகரித்து வெளியே அனுப்பிவிட்டார்” - கண்ணீர் வடிக்கும் மூதாட்டி 

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

old woman  saying that my son had usurped the house and sent her out

 

தனது மகன் வீட்டை அபகரித்துவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக மூதாட்டி ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார். 

 

ஈரோடு திருநகர் காலனியில் 4வது வீதியைச் சேர்ந்தவர் 69 வயதான மூதாட்டி திலகவதி. இவரது கணவர் சிவஞானம் இறந்துவிட்ட நிலையில், இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனக்குச் சொந்தமான வீட்டை அபகரித்துக்கொண்டு தன்னை வெளியே அனுப்பிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார் மனு அளித்துள்ளார்.

 

அந்த மனுவில், “எனக்குச் சொந்தமான வீடு எனது பெயரில் உள்ளது. அதில் எனது மூத்த மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கீழ்த் தளத்திலும், இளைய மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் தளத்திலும் தங்கி இருந்தனர். நான் வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னை என் மகன்கள் சரியாகக் கவனிக்கவில்லை. என் வீட்டை மகன்கள் சரியாகப் பராமரிக்காததால் கழிவு நீர் சுவரில் இறங்கி கட்டடம் சேதம் அடைந்துவிட்டது. 

 

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு மகன்களையும் எனது வீட்டைக் காலி செய்யுமாறு கூறிவிட்டேன். நான் மேல் தளத்தை வாடகைக்கு  விட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு எனது மீத நாட்களைக் கழித்துக் கொள்கிறேன் என மகன்களிடம் கூறிவிட்டேன். அதனை ஏற்று எனது மூத்த மகன் வீட்டைக் காலி செய்து சென்றுவிட்டான். ஆனால் இளைய மகன் காலி செய்யாமல் இருந்து வருகிறான். இளைய மகன், அவரது மனைவி அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நான் குடியிருந்த கீழ்த் தளத்தை மட்டும் பூட்டிவிட்டு மூத்த மகன் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். உடல் நலம் சரியான பிறகு செப்டம்பர் 7 ஆம் தேதி மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, எனது பூட்டு உடைக்கப்பட்டு புது பூட்டுப் போடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 

 

இது குறித்து எனது இளைய மகன் மற்றும் அவரது மனைவியிடம் கேட்டபோது, அவர்கள் என்னைக் கடுமையாகத் திட்டிவிட்டு இது எனது வீடு நீ வீட்டை விட்டு வெளியேறு என்று கூறிவிட்டனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை  எடுக்கவில்லை. வயது முதிர்வு காரணமாக என்னால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. எனக்குச் சொந்தமான வீட்டில் கீழ்த் தளத்தில் நான் குடியிருந்து கொண்டு மேல் தளத்தை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தில் பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, எனது இளைய மகனும் அவரது மனைவியும் எனது வீட்டை அபகரித்து எனது சொத்தையும் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. இந்த வீடு மட்டுமே எனக்கு ஜீவனாம்சம். தற்போது ஒரு மாதமாக நண்பர் வீட்டில் வசித்து வருகிறேன். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு வீட்டை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.