திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டி கிராமம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(55). இவர், தனது மகன்களான ராம்குமார் மற்றும் செல்வகுமார் ஆகியோரோடு இணைந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார்.
இவர், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 7 லட்சம் பணத்தை கடனாக பெற்று தவணை முறையில் செலுத்தி வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கடனை முறையாக திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி மற்றும் அவரது இளையமகன் இருவரும் வந்தபோது வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி உள்ளார். கதவை உடைத்து அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.