Skip to main content

'என்எல்சியில் விவசாயிகள் தரப்பில் ஒருவரை இயக்குனராக நியமிக்க வேண்டும்' - சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கருத்து

Published on 02/08/2023 | Edited on 03/08/2023

 

'In NLC, one should be appointed as a director from the side of the farmers' -Chindhanaichelvan MLA

 

சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளரும் காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏவுமான சிந்தனைச்செல்வன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 4 முதல் 6 சதவீதம் வரதான் பிரதிநிதித்துவம் உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அளவில் சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

 

இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட இடங்களில் தகுதியானவர்கள் இல்லை என அவர்களின் இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது என்ற தகவல் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்த விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும்.

 

விவசாயிகளிடம் நிலங்களைக் கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகத்தில் பங்குதாரர்களாக விவசாயிகளை இணைக்க வேண்டும்.  மேலும் விவசாயிகள் தரப்பில் ஒரு இயக்குனரை நியமிக்க வேண்டும். அதேபோல் தமிழக அரசு சார்பிலும் ஒரு இயக்குனரை நியமிக்க வேண்டும். ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து தர வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு. என்.எல்.சி இந்தியா என்பதை என்.எல்.சி தமிழ்நாடு என மாற்றக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

 

விளிம்புநிலை மக்கள் மற்றும் ஆதிதிராவிட மக்களின் துணைத் திட்டம் குறித்து  எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் ஒரு சிறு பேச்சைக் கூடப் பேசவில்லை.  தற்போது ஆதிதிராவிட மக்களின் துணை திட்ட நிதியைப் பெண்கள் உரிமை திட்டத்திற்கு மாற்றியுள்ளதாகக் கூறுகிறார்.  இது போன்ற சர்ச்சை பேச்சுகளைத் தடுக்க, ஆதிதிராவிட துணை திட்டத்தைச் செயல்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது.  அதனைத் தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். விரைவில் அது நடைபெறும் அதன் பிறகு இதுபோல் ஆதாரமற்ற பேச்சுகளைப் பேச முடியாது.

 

அண்ணாமலை பாதயாத்திரை வெறுப்பு, விஷ அரசியலை விதைக்கவே அவர் யாத்திரை செல்கிறார். தமிழக மக்களிடம் அது எடுபடாது. மணிப்பூரில் மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் தீ வைப்பு, வன்முறை சம்பவத்தில் பல நூறு  உயிர்கள் பலியாகின, ஆயிரம் பேர் மத்தியில் பாலியல் வன்கொடுமைகள், கூட்டு பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளது. இவைகளை பாஜக அரசுகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தமிழக மக்கள் மட்டுமல்ல உலகத்தில் அனைத்து மக்களின் ஆன்மாக்கள் மன்னிக்காது'' என்றார்.

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பால. அறவாழி, மாநில நிர்வாகி நீதி வளவன், சட்டமன்ற தொகுதி செயலாளர் யாழ்திலின், இஸ்லாமிய ஜனநாயக பேரவை லியாகத் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.