Skip to main content

‘தகரக் கொட்டகையில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம்’ - அமைச்சர் மெய்யநாதன்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

new building Rs 2.6 crore for government school which is running tin shed

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து உடைந்ததால் 2017ம் ஆண்டு பாதுகாப்பில்லாத பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப முடியாது என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் பாதுகாப்பில்லாத ஆபத்தான கட்டடம் என்று பூட்டி சீல் வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிதியில் அரை சுவர், ஜன்னல் கம்பிகளுடன் தகர சீட் போட்டு 6 வகுப்பறை கட்டப்பட்டது. வெயில் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால், மாணவர்கள் மரத்தடியிலும் கிராமத்தினர் அமைத்துக் கொடுத்துள்ள தகரக் கொட்டகையிலும் என வகுப்பறை கட்டடம் இல்லாமல், 205 மாணவ மாணவிகள் பாதுகாப்பில்லாத தற்காலிக தகரக் கொட்டகையில் பல வருடமாகப் பயின்று வருகின்றனர். மழைக் காலங்களில் தற்காலிக வகுப்பறை தகரக் கொட்டகையில் மழைச் சாரல் அடிப்பதால் மாணவ, மாணவிகள் புத்தகப் பைகள் நனையாமல் தூக்கி வைத்துக் கொண்டு நிற்கும் அவல நிலையில் உள்ளது. இதனை நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டிருந்தோம்

 

இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அரயப்பட்டியில் நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, அரயப்பட்டி பள்ளிக்கு வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருநாளூர் தெற்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் சில ஆண்டுகளிலேயே சேதமடைந்துவிட்டது. ஒரு கட்டடம் 40 ஆண்டுகள் வரை சேதமடையாமல் இருக்க வேண்டும் ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டடம் கட்டிய ஒப்பந்தக்காரர் அவ்வளவு மோசமாக கட்டியதால் சில ஆண்டுகளில் சேதமடைந்துவிட்டது. கட்டடம் சேதமடைந்துவிட்டதை அறிந்து ஆபத்து வராமல் தடுக்க நான் போய் பார்த்து உடைக்கச் சொன்னேன். ஆனால் அந்த மாணவர்கள் பாதுகாப்பான வகுப்பறையில் படிப்பதாக கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

 

இப்போது திருநாளூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நபார்டு மூலம் ரூ.2.6 கோடியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டப்படும்” என்றதாக கூறப்படுகிறது. விரைவில் பள்ளிக் கட்டடம் கட்டப்படும் என்ற அமைச்சரின் இந்த தகவலால் திருநாளூர் பள்ளி மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.