Skip to main content

கல்குவாரி விபத்து... தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

Calcutta Accident ... National Disaster Rescue Force Quick!

 

நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில், இந்தச் சம்பவத்தில் சம்பந்தபட்ட கல்குவாரியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ளது சங்கர் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி. இந்தக் கல்குவாரியில் நேற்று இரவு ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் சிக்கிக் கொண்டனர். சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஆறு தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஊழியர்களை மீட்கும் பணியைத் துரிதப்படுத்திய நிலையில் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹெலிகாப்டர் உதவியுடன் கல்குவாரியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குவாரியில் சிக்கிக் கொண்ட ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிடுவார்கள் என எதிர்பார்த்து அவர்களின் உறவினர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆறு தொழிலாளர்களில் முருகன், விஜய் என்ற இரண்டு தொழிலாளர்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நான்கு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் மீட்பு பணியின்போது பாறைகள் சரிந்து விழுந்ததால் தற்பொழுது தற்காலிகமாக மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் மீட்புப்பணியை துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே உள்ளே சிக்கியுள்ள மீதம் 4 பேரில் மூவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்