Skip to main content

போலீஸாருக்கு சவால் விடும் கடத்தல்காரர்கள்; தொடரும் சிலை திருட்டு!!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

பல ஆண்டுகளுக்கு முன்பு சத்தமே இல்லாமல் திருடுபோன கோயில் சிலைகளை மீட்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் வேளையில், எந்தவித அச்சமும் இல்லாமல் அடுத்தடுத்து பிரசித்திப்பெற்ற கோயில்களின் சிலைகளை குறிவைத்து தங்களின் கைவரிசையை காட்டிவருகின்றனர் சிலை கடத்தல்காரர்கள்.

 

nagai temple statue incident

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடக்கரையோரமுள்ள கிராமம் கொண்டல், முப்போக விவசாயத்தால் பசுமைக்கு எப்போதும் பஞ்சமில்லாத அந்த கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோயிலும் அழகு சேர்த்து அருள்பாவித்து வருகிறது. அந்த கோயிலை பழனி முருகன் கோயிலுக்கு நிகரானதாகவும், கீழ்பழனி என்றும் பக்தர்களால் அழைப்படுவதுண்டு. அந்த அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கோயிலின் கருவறையில் இருந்த உற்சவர்களான முருகன், வள்ளி தெய்வானை ஆகிய மூன்று சிலைகளும் தான் தற்போது திருடு போயிருக்கிறது.

 

nagai temple statue incident


என்ன நடந்தது கோயில் குருக்கல் நட்ராஜ் கூறுகையில்," கோயிலில் வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு  இரவு 10 மணிக்கு கோயிலை பூட்டிவிட்டு போனேன். மறுநாள் காலை வழக்கம்போல் அதிகாலை பூஜை செய்ய  கோவிலைத் திறக்க வந்து பார்த்ததும் அதிர்ச்சியாயிடுச்சி. கோயிலில் வெளிப்புற இரண்டு கேட்டுகளின் பூட்டும் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த மூன்று உற்சவர் சிலைகளையும் காணவில்லை. பிறகு அறங்காவலர்களுக்கும் போலீஸ்க்கும் தெரிவித்தேன்." என்கிறார்.

 

nagai temple statue incident


"முருகன் சிலை மட்டும் இரண்டரை அடி உயரம், வள்ளி, தெய்வானை ஆகிய இரண்டு சிலைகளும் தலா ஒன்றரை அடி உயரம் கொண்டவை. மூன்று சிலைகளும் 100 கிலோவை தாண்டி இருக்கும். அதன் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும். இதை ஒரிரூ நாளில் செய்திடவில்லை, உள்ளூர் பகுதிகளை சேர்ந்தவர்களும் செய்திடமுடியாது, யாரோ அந்த சிலைகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் நன்கு தெரிந்த இங்குள்ளவர்களின் உதவியில்லாமல் இந்ததிருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை. நள்ளிரவுக்கு மேல் பூட்டை சாவிகொண்டு திறந்து தங்களின் கைவரிசை காட்டியுள்ளனர். அதிலும் ஜாக்கிரதையாக கோயிலில் பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளை துண்டித்து, எந்த தடயமும் விடாமல் சாமர்த்தியமாக  திருடியுள்ளனர். அதோடு திருடவந்தவர்கள்  சிலைகளை மட்டுமே குறிவைத்து வந்துள்ளனர். உண்டியல்கள் உடைக்கப்படவில்லை, விலை உயர்ந்த மூலவர் சிலைகளின் தங்க நகைகள் உள்ளிட்ட எந்த பொருட்களையும் திருடவில்லை, சிலைகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடித்துள்ளனர்." என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

சீர்காழி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். எந்த ஒரு தடயமும் இல்லாமல் சிலை திருடியிருப்பது காவல்துறையினரை  திணறடிக்கவே செய்துள்ளது.

கடந்த மாதம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த கோயில் குருக்களிடமிருந்தும், அவருக்கு உதவியாக இருந்த பாஜக பிரமுகரிடம் இருந்து பல கோடி மதிப்புடைய சிலைகள் கைப்பற்றப்பட்டு, அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார், அதற்குள் இங்கு சிலை கானாமல் போயிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.


             

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.