Skip to main content

“சினிமா நடிகர்கள் நிஜமான ஹீரோக்கள் அல்ல” - நடிகர் தாமு விழிப்புணர்வு 

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Movie actors are not real heroes. Your father is a real hero say actor dhamu

 

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 'கல்வியில் காவல்துறை', 'போதை ஒழியட்டும் - பாதை ஒளிரட்டும்' என்ற நிகழ்ச்சி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில்  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். 

 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சீடர் நடிகர், டாக்டர் தாமு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரது உரையில், “ஆசிரியர்கள் எங்கும் மாணவர்களை விட்டுக் கொடுப்பதில்லை. மாணவர்களை திருத்தி தீபமாக மாற்றுகிறவர்கள் தான் ஆசிரியர்கள். அரசு நிதி ஒதுக்கி, இலவசமாக சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்குகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சினிமா நடிகர்கள் நிஜமான ஹீரோக்கள் அல்ல. உங்கள் தந்தை தான் நிஜமான ஹீரோ. சினிமா நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள்.

 

Movie actors are not real heroes. Your father is a real hero say actor dhamu

 

அம்மா உங்களை கருவறையில் சுமந்தார். ஆசிரியர் உங்களை வகுப்பறையில் சுமக்கிறார். வாழ்க்கையில் சுமோக்கிங், டிரிங்கிங் ஆகிய 2 கிங்கை வெளியேற்றினால் நீங்கள் கிங்காக இருப்பீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றினால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 33-வது இடத்தில் உள்ளது. அதை நீங்கள் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும். நீங்கள் தான் உண்மையான சாம்பியன். இதை நீங்கள் உணர வேண்டும். போதையின் பாதையில் மாணவர்கள் சென்று விடக்கூடாது. செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள். அதில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வாட்ஸ்-அப், யூடியூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதில் இருந்து வெளியே வாருங்கள். ஏராளமான புத்தகங்களை படியுங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். 

 

மேலும் 'போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்' என்ற தலைப்பில் நடிகர் தாமு, “மாணவர்களாகிய நீங்கள் உங்களது பெற்றோர்களை எப்படி நடத்துகிறீர்கள். அவர்கள் எப்படி கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து, ஆளாக்கி இருக்கிறார்கள் என்பதை குழந்தை பிறப்பு முதல் படிக்க வைத்து வருவது வரை” தத்ரூபமாக விளக்கி பேசினார். இதை கேட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் தேம்பி தேம்பி அழுதனர். ஆசிரியர்களும், போலீசாரும் கண் கலங்கியதை காண முடிந்தது. இதற்கிடையில் மாணவர்கள் அழும் - வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10,11,12 படிக்கும் 22 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த  5000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு, துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, சபியுல்லா, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.