Skip to main content

தாயைக் கொன்று வீட்டில் புதைத்த கொடூர மகன்! 

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

mother passes away police arrested her son

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு இரண்டு மகன், இரண்டு மகள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமான நிலையில், மகன்கள் சேவாக், செல்வமணி ஆகிய இரண்டு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ராஜேந்திரன் அவரது மகன் செல்வமணி ஆகிய இரண்டு பேரும் வெளியில் வேலை பார்த்து வருகின்றனர்.

 

கஸ்தூரியும், சேவாக்கும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு சேவாக் தனது தாய் கஸ்தூரியை காணவில்லை என்று அக்கம் பக்கத்தினரிடம் உறவினர்களிடமும் மற்றும் தனது மாமாவிடமும் கூறியுள்ளார். பின்னர் அவரது மாமா வீட்டில் வந்து பார்த்த பொழுது  வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் என்னவென்று சேவாக்கிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

 

இதனை அடுத்து ஆவினங்குடி போலீசார், சேவாக் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்பொழுது வீட்டின் உள்ளே துர்நாற்றம் வீசியது உறுதி செய்யப்பட்டு, பின்னர் வீட்டின் உள்ளே தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி வீட்டுக்குள் தோண்டி பார்த்தபோது கஸ்தூரி பிணமாக புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர்  கஸ்தூரியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

mother passes away police arrested her son

 

பின்னர் ஆவினங்குடி போலீஸ் சேவாக்கிடம் நடத்திய விசாரணையில், சேவாக் திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் தற்போது கோவை மாவட்டத்தில் வேலை செய்துவருகிறார். சேவாக் காதல் திருமணம் செய்துகொண்டதால், தாய்க்கும் மகனுக்கும் அவ்வப்பொழுது தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. அதேசமயம், சேவாக், அவ்வப்பொழுது மனைவியை பார்ப்பதற்காக கோவை சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் கோவைக்கு சென்று மனைவியை பார்த்துவிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும், கஸ்தூரிக்கும் சேவாக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த சேவாக், அவரது தாய் கஸ்துரியை அடித்து கொன்றுள்ளார். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல், தன் வீட்டிலேயே தாயின் உடலை புதைத்துள்ளார். 

 

இரு தினங்களாக தன் தாய் கஸ்தூரியைக் காணவில்லை என ஊர் மக்களிடமும் உறவினர்களிடமும் நாடகமாடியுள்ளார். பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே விஷயம் வெளியே தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.