அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர் மதுரையில் முதல் முறையாக பிரமாண்ட மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்குச் சென்ற தனது மனைவி வீட்டிற்குத் திரும்பவில்லை என்று திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராதாபுரத்தைச் சேர்ந்த ஜேசுபாதம் என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், “எனது பெயர் ஜேசுபாதம் (45). எனது மனைவி, அதிமுக மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். இவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் குழு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனது உழைப்பின் மூலம் 13.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளேன். மேலும், 200 பவுன் தங்க நகை வாங்கியுள்ளேன். எங்களுக்கு 18 வயதில் மகளும், 17 வயதில் மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று எனது மனைவி, மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், இன்று வரை அவர் வீடு திரும்பவில்லை. நான் பல இடங்களில் சென்று விசாரித்தேன். அப்போது, எனது மனைவிக்கு கடந்த அதிமுக ஆட்சியின் போதே அதிமுக பிரமுகர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பிரமுகருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்குச் சென்றபோது எனது மனைவியை அந்த பிரமுகர் கடத்திச் சென்றுள்ளார் என்று எனக்குத் தெரியவந்தது. மேலும், எனது மனைவி மாநாட்டிற்குச் செல்லும்போது 50 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் பணமும் எடுத்துச் சென்றுள்ளார். எனவே, எனது மனைவியை மீட்டுக் கடத்திச் சென்ற அந்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம் பழுவூர் காவல் நிலையத்திற்கு ஜேசுபாதம், அவரது மனைவி மற்றும் அதிமுக பிரமுகர் ஆகியோர் வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.