Skip to main content

அமைச்சர் கரோனா ஆய்வு: செய்தியாளர்களுக்கு அனுமதி கிடையாது.. மேலிடத்து உத்தரவாம்..! 

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Minister a v velu Corona discussion; Journalists are not allowed ..

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி குறித்த ஆய்வுக்கூட்டம் ஜூன் 10ஆம் தேதி (இன்று) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செங்கம் கிரி, வந்தவாசி அம்பேத்குமார், கலசப்பாக்கம் சரவணன், செய்யார் ஜோதி, எம்.பிக்கள் திருவண்ணாமலை அண்ணாதுரை, ஆரணி விஷ்ணுபிரசாத் மற்றும் மாவட்ட சேர்மன், ஒன்றியக் குழு தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உட்பட அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த போளுர் எம்.எல்.ஏ அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, ஆரணி எம்.எல்.ஏ சேவூர். ராமச்சந்திரன் என இரண்டு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு தலைவர்கள் பெரும்பாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.


கூட்டம் தொடங்கியதும், கரோனா தடுப்புப் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது குறித்தும், செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் எ.வ. வேலு பேசினார். தொடர்ச்சியாக கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டிக்கர்களை வெளியிட்டார். அதற்கடுத்த  சில நிமிடங்களில் கூட்ட அரங்கில் இருந்த செய்தியாளர்களிடம், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிக்கான ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். செய்தியாளர்கள் கலந்துகொள்ளக்கூடாது என மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு. அதனால் வெளியே போங்கள் என செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறி செய்தியாளர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

 

Minister a v velu Corona discussion; Journalists are not allowed ..


வெளிப்படையான நிர்வாகம் எனச் சொல்லி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையில் இருந்து கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கிறார்; செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். சட்டப்பேரவை நிகழ்வையும் நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் அப்படி வெளிப்படையாக செயல்படும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்முறையாக புதிய அரசின் அமைச்சர் கலந்துகொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படக்கூடாது என உத்தரவிட்டு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.

 

இது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய கூட்டம் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் சொன்னார்கள். ஆனால் மக்கள் பிரதிநிதிகளாக அல்லாத திமுக பிரமுகர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் எந்த அடிப்படையில் அமர்ந்திருந்தார்கள் என்கிற கேள்விக்கு அதிகாரிகள் பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.

 

கூட்டத்தில் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துதானே பேசப்போகிறார்கள். அந்தத் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்ததானே பத்திரிகை, ஊடகங்கள். இதில் என்ன ரகசியம் வெளியாகிவிடப்போகிறது. அரசுக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் அமரலாம், ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகையாளர்கள் அமரக்கூடாது என்பது என்ன நியாயம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் செய்தியாளர்கள் உள்ளே வரக்கூடாது எனச் சொல்லி தடைப்போட்டார்கள். மக்கள் பிரதிநிதியாக இல்லாத அதிமுகவினர் பலரும் ஆய்வுக்கூட்டத்தில் அமர்ந்து கேள்விகள் கேட்டனர். அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் தங்களது செல்ஃபோன்கள் வழியாக சமூகவலைதளங்களில் கூட்டத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்தார்கள். இப்போது திமுக ஆட்சி நடக்கிறது, கடந்தகால அதிமுக அமைச்சர்களைப் போல், இப்போது திமுகவைச் சேர்ந்த அமைச்சரும் செய்தியாளர்களை வெளியே அனுப்பச் சொல்வது சரியா என்கிற கேள்வி எழுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்