Skip to main content

“நிதியை நிறுத்தவில்லை; சிறிது காலம் தாமதம் மட்டுமே” - அண்ணாமலைக்கு அமைச்சர் மா. சுப்ரமணியன் பதில்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Minister M.Subramanian reply to Annamalai regarding the funds provided to pregnant women

 

மத்திய அரசின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியைக் கடந்த 2 ஆண்டுகளாகத் தி.மு.க. அரசு முடக்கி வைத்திருப்பதாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள நிதியைத் தமிழக அரசு நிறுத்தி வைக்கப்படவில்லை என்று அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், “டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் 2006-ம் ஆண்டு ரூ. 6,000 என ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011-2012-ல் ரூ. 12,000 ஆகவும், தற்போது ரூ. 18,000 ஆகவும் உயர்த்தி முதல் இரு கர்ப்பத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. ரூ. 4,000 ரூபாய்க்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் ரூ. 14,000 பணமாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

 

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2006 முதல் இதுவரை ரூ.11 ஆயிரத்து 702 கோடி நிதியானது 1 கோடியே 14 லட்சத்து 51 ஆயிரத்து 567 கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம் 2018-2019-ல் இருந்து முதல் கர்ப்பத்திற்கு மட்டும் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.3,000-ம் மாநில அரசின் மூலமாக ரூ.2,000-ம் பெறப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.9,000 அதே முதல் கர்ப்பத்திற்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் ரூ.14,000-ல் மத்திய அரசின் சார்பாக ரூ.3,000-ம் மாநில அரசின் சார்பாக ரூ.11,000-ம் வழங்கப்படுகிறது.

 

இத்திட்டத்தின் கீழ் முதல் கர்ப்பத்தில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 765 கர்ப்பிணிகளுக்குப் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் மூலமாக நிதியுதவி தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும், 5 லட்சத்து 36 ஆயிரத்து 192 கர்ப்பிணிகளுக்குத் தமிழக அரசு தேசிய நலக் குழுமத்தில் இருந்து, தேசிய தகவல் மையம் சென்னை மூலமாகப் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகத் திருப்பப்பட்டுள்ளது.

 

மேற்கண்ட குறைகளைக் களைவதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை முதன்மைச் செயலர் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு, 13.06.2022, 17.10.2022 மற்றும் 12.12.2022 ஆகிய நாட்களில் 3 முறை ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாடு தேசிய திட்டக் குழுமம் சார்பாகத் தேசிய தகவல் மையத்தின், சென்னை குழுவானது, 11.01.2023 மற்றும் 01.05.2023 ஆகிய தினங்களில் டெல்லி தேசிய தகவல் மையத்திற்குச் சென்று, மென்பொருள் என்ஜினீயர்களுடன் நேரடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 1.0-ல் உள்ள குறைகளைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாகவும், மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மறு பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறு பதிவேற்றம் செய்து விரைவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி தொகை கொடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மென்பொருளில் தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து நேரடியாகப் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்நாடு அரசால் நிறுத்தி வைக்கப்படவில்லை. சிறிது காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்குத் தங்கு தடையின்றி நிதியுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”. தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்