கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு ஸ்ரீ ராமபுரத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தினேஷ்குமார்(23). பி.காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் கம்பால குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கோவர்ஷினி (20). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி. காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
தினேஷ்குமாரும், கோவர்ஷினியும் கோபி பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்து இதனால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி இன்று காலை பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேரடியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ்குமார், கோவர்ஷினி தஞ்சம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.