Skip to main content

காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்களை மீட்க வேண்டும்: அன்புமணி

Published on 20/12/2019 | Edited on 20/12/2019


   
காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்களை மீட்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், காஷ்மீர் ஆளுனரிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

ஆப்பிள் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் சென்ற தமிழக சரக்குந்து ஓட்டுனர்கள் 900-க்கும் மேற்பட்டோர்  கடுமையான பனிப்பொழிவில் சிக்கி, கடந்த 13 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.


 

lorry



தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு காஷ்மீரில் இருந்து ஆப்பிள் ஏற்றி வருவதற்காக சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட சரக்குந்துகள் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி புறப்பட்டன. அவை ஆப்பிள் ஏற்றிக் கொண்டு கடந்த 7-ஆம் தேதி   காஷ்மீரின் சோபியான் பகுதியிலிருந்து புறப்படவிருந்த நேரத்தில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது.
 

அதனால் காஷ்மீரில் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினரின் உதவியுடன் சாலைகளில் பனி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. எனினும் போக்குவரத்தை முழுமையாக சீரமைக்க முடியாத நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை மட்டும் பாதுகாப்பாக அங்கிருந்து  வெளியேற அனுமதித்த காஷ்மீர் அரசு, சரக்குந்து உள்ளிட்ட வாகனங்கள் வெளியேற அனுமதிக்கவில்லை.


 

இதனால் தமிழகத்திலிருந்து சென்ற 450-க்கும் மேற்பட்ட சரக்குந்துகளின் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று 40 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டன. காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதியில் முடக்கப்பட்டிருக்கும் அவர்கள் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடுமையான பனிப்பொழிவில் சிக்கியுள்ள அவர்களில் பலருக்கு மோசமான உடல்நலக் குறைவும் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவம் எடுத்துக் கொள்வதற்கான வசதிகளும் இல்லாததால் அவர்களின் அவதி அதிகரித்துள்ளது.


 

பனிப்பொழிவால் சாலைகள் மூடப்படும் சூழலில் முடிந்தவரை சாலைகளை சீரமைத்து முன்னுரிமை அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் வெளியேற வசதி செய்து தருவது இயல்பானது தான். அதில் தவறு இல்லை. ஆனால், சரக்குந்து வாகனங்களை 13 நாட்களுக்கும் மேலாக முடக்கி வைப்பது நியாயமல்ல. சரக்குந்து ஓட்டுனர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களாகவும், உடல் நலக்குறைவு கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும். அவர்களால் எத்தனை நாட்களுக்குத் தான் பனிப்பொழிவை தாங்கிக் கொண்டு இருக்க முடியும்? என்பதை காஷ்மீர் அரசு நிர்வாகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 

காஷ்மீரில் பெரும்பான்மையான சுற்றுலா வாகனங்கள் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சரக்குந்துகளை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இல்லாவிட்டாலும் அணி அணியாகவாவது சரக்குந்துகளை   பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். அதுவரை சரக்குந்து ஓட்டுனர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை காஷ்மீர் அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், காஷ்மீர் ஆளுனரிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.