Skip to main content

இது எல்லாம் ஒரு பொழப்பா.. சசிகலா மூலம் பதவிக்கு வந்த பழனிச்சாமி எழவுக்கு கூட போகாமல் பயந்து பயந்து ஆட்சி நடத்துகிறார்! ஐ.லியோனி பேச்சு!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018



 

Leoni

 

திமுக செயல் தலைவரான ஸ்டாலின் பிறந்த நாளைமுன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசும்போது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், கடந்த ஆறு மாதங்களாக உங்கள் இடத்தில் அம்மா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்க என பொய் சொன்னோம். அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள். இனிமேல் பொய் சொல்லமாட்டோம் என்று உங்களிடம் மன்னிப்பு கேட்டார். அது எல்லாம் ஒரு பொழப்பா. அதற்கு பேசாமல் இங்குள்ள வெள்ள விநாயகர் கோவிலில் பிச்சை எடுத்து விட்டு போகலாம். 

எந்த நேரத்தில் சின்னம்மா நம்மை கழட்டி விடுமோ என்ற பயத்திலேயே இந்த ஆட்சி நடக்கிறதே தவிர, மக்களுக்காக நடக்கவில்லை. எதிர் கட்சியையும் செயல்பட விடுவதில்லை. எதிர்கட்சி சிறப்பாக செயல்பட்டால்தான் நாடு முன்னேறும். ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் ரூபாய் நோட்டு போல் இருக்க வேண்டும். 

ஆறு மாதமாக அம்மாவை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைத்து கொண்டு, இட்லி சாப்பிட்டாங்க, அது சாப்பிட்டாங்க என்று எல்லாம் செய்தி தொடர்பாளர்கள் பொய் சொன்னார்களே தவிர, யாரும் பார்க்கவில்லை. ஆனால் முதன் முதலில் எங்கள் தலைவர் தான் அந்த அம்மா குணம் அடைந்து மீண்டும் கட்சி பணியாற்ற வர வேண்டும் என்றார். 

அதன் பின்னர் ஸ்டாலினும் பார்க்க போனார். ஆனால் பார்க்க விடவில்லை. ஆளுநரையே நாங்க பார்க்க விடவில்லை. உங்களை மட்டும் பார்க்க விடுவோமோ என திருப்பி அனுப்பி வைத்தனர். ஆனால் இப்ப அந்த சின்னம்மா மூலம் பதவிக்கு வந்த பழனிச்சாமி அந்த வீட்டு எழவுக்கு கூட போகாமல் பயந்து பயந்து ஆட்சி நடத்தி வருகிறார். 

அந்த அம்மா சமாதியில் மூன்று முறை சின்னம்மா அடித்ததை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அது எதற்காக அடித்தார் என்று தெரியுமா? நீ நிம்மதியா இங்கே உள்ள இருக்க, நான் நிம்மதி இழந்து ஜெயிலில் இருக்கிறேன். நீ தனியா கூட போகலாம். ஆனால் நான் போலீஸ் இல்லாமல் வர முடியாது. ஒ.பி.எஸ். ஒரு முட்டாள். அதனால் பன்னீர் வாங்கிடாதீங்க என சொல்லிதான் அடித்தாங்க. இறந்த பிறகு அடிவாங்கின ஒரே முதல்வர் அம்மாதான். 


சுவீட்ஸ் பேங்கில் இருக்கிற பணத்தை எடுத்து உங்களுக்கு எல்லாம் 15 லட்சம் போடுகிறேன் என்று மோடி சொல்லி விட்டு, இருந்த 500, 1000 நோட்டுகளை செல்லாமல் செய்து விட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறேன் என்றும் ஏமாற்றிவிட்டார். தற்பொழுது அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, கமல் இரண்டு நடிகர்களுமே நல்ல நடிகர்கள் தான். ஆனால் மக்கள் பிரச்சனையை பார்க்காமல் இமயமலையில் குதிரையில் போகிறார். மற்றொருவர் கொள்கை என்னவென்றே தெரியாமல் பேசி வருகிறார். 

ஆனால் ஸ்டாலின் அப்படி இல்லை. அனிதா பிரச்சனையை கேள்விபட்ட உடனே இரவோடு இரவாக சென்று அனிதா இறுதி ஊர்வலம் வரை இருந்து விட்டு போனவர். அப்ப எல்லாம் இந்த ரஜினி, கமல் எங்கே போனார்கள். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர முடியாது. 29 எம்எல்ஏகளை வைத்துகொண்டு விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்தவர். ஒரு தடவை மட்டும் சட்டமன்றத்திற்கு வந்து கைநீட்டி பேசினார். அதோடு அவரும், அவரது கட்சியும் காணாமல் போய் ஜென்மத்திற்கும் தலை காட்ட முடியாமல் இருக்கிறார். 


அதுபோல் டி.ஆர். கட்சியில் அவரும் அவரது மனைவியும் மட்டும் தான் உள்ளனர். சரத்குமார் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியும் இரண்டாக போய்விட்டது. எம்.ஜி.ஆர் வாரிசு என சொல்லி வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்து வீணாகி போய்விட்டார். இப்படி நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து வீணாகி போன வரலாறு இருக்கு. ஆனால் எங்கள் தலைவர் சினிமாவிலிருந்து வந்தாலும் கூட அரசியல் சாணக்கியர். எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எங்க தலைவர் தான் என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.