Skip to main content

நம்பி வந்த சிறுமியை சீரழித்த வாலிபர்; 25 ஆண்டு சிறை தண்டனை விதித்த கிருஷ்ணகிரி நீதிமன்றம்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

கிருஷ்ணகிரி அருகே, உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த சிறுமியை, உறவினர் மகனே சீரழித்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரீத்திகா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அளேசீபம் அருகே உள்ள தொட்டமெட்டரை பகுதியில் உள்ள தனது உறவினர் நாராயணப்பா என்பவர் வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

krishnagiri child incident district mahila court judgement

நாராயணப்பாவின் மகன் சுதாகர் (22), சிறுமி பிரீத்திகாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு செப். 14ம் தேதியன்று, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். 


இதுகுறித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்தனர். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த புவனேஸ்வரி, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். 


இந்த வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, புதன்கிழமை (ஜன. 29) நீதிபதி தீர்ப்பு அளித்தார். 


சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சுதாகருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள், மற்றொரு பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதேநேரம் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.



 

சார்ந்த செய்திகள்