Skip to main content

கொடைக்கானலில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... 

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

கொடைக்கானலில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

 

kodaikanal


 

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருவதால் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வருவார்கள். இப்படி வரக்கூடிய பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் உள்ள லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும், வீடுகளிலும் தங்கிவிட்டு செல்வார்கள். இதனால் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஆங்காங்கே ஈசல் புற்றுகள் போல் முளைத்திருந்தன.
 

இந்த நிலையில்தான் கோட்டையைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 45 கட்டடங்களுக்கு சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கமிஷ்னர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 45 கட்டிடங்களுக்கு சீல் வைத்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மேலும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 1415 கட்டடங்களுக்கு சீல் வைத்து வரும் மார்ச் 11-ம் தேதிக்குள் அறிக்கை தருமாறு  உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி கமிஷ்னர் முருகேசன் விதிமுறைகளை மீறி கட்டிய 1415 கட்டடங்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்க  முடிவு செய்தார்.
 

இந்த நிலையில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்பட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டசபையில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், இயக்குனர் ராஜேஷ் லக்கானி உட்பட பல அதிகாரிகள் கொடைக்கானலுக்குவந்து மாஸ்டர் ப்ளானை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கி இருந்தனர். கோர்ட் உத்தரவுப்படி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள  கட்டடங்களில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சிறு வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களை மறு உத்தரவு வரும்வரை சீல் வைக்கக்கூடாது, மீதி உள்ள விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க சொல்லியும் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில்தான் நகராட்சி கமிஷ்னர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல், கட்டிட உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தெரியவர அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதேபோல் ஆங்காங்கேயுள்ள வாட்ச் உரிமையாளர்களும், வியாபாரிகளும் பெரும்  பெருந்திரளாக நின்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க விட மாட்டோம் என போர்க்கொடி தூக்கினர். காவல்துறையினர் விதிமுறைகளைமீறி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களையும், வணிகர்களையும்  அழைத்து பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.