Skip to main content

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்; எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

 karur police superintendent talks about north indian issue

 

கரூரில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளிவருவதால், வதந்திகளை வெளிமாநிலத் தொழிலாளர்கள் நம்பக் கூடாது என்பதற்காகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த காவல் கோட்டங்களுக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் அந்தந்த காவல்நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அச்சமின்றி பணியாற்றிட அவர்களுக்கு அறிவுறுத்தினர். இந்தப் பணிகளைப் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறுகையில், "அண்மையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வந்துள்ளதால், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த அச்ச உணர்வை அவர்களிடம் போக்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இன்று அவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான உடனடி உதவிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள 9498100780, 04324296299 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

 

இதற்காக மாவட்ட காவல்துறையில் இந்தி மொழி தெரிந்த காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம், வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பினால், அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்