'கறுப்பர் கூட்டம்' என்ற யூ டியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் நேற்று (15.07.2020) இரவு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று(16.07.2020) மதியம் 3 மணிக்கு புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியிலுள்ள, பெரியார் படிப்பகத்தில் இருந்தடி தமிழக போலீசாரிடம் சரணடைய காத்திருந்தார். அப்போது அவர், “சரண்டராவதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு காத்திருப்பதாகவும், தன் மீது திட்டமிட்ட அரசியல் சதியால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது” எனவும் கூறிய அவர், “தி.மு.கவிற்கு ஆதரவாகதான் இருப்பதாக கருதி, பா.ஜ.க திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளதை சட்ட ரீதியாக சந்திப்பேன்” எனவும் தெரிவித்தார். பின்னர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். புதுச்சேரியில் சரணடைந்த சுரேந்திரனை தமிழக போலீசார் சென்னை அழைத்து சென்றனர்.