Skip to main content

'பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் போலும்' கமல் கடும் விமர்சனம்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019


நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான். 1950ல் இந்தியா குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம்.

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது. பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகள் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும்.வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இவ்வாறு கமல் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அதில், " நான் எப்போதும் சொல்லிவரும் செய்திகளையே அந்த விடியோவில் தெரிவித்திருந்தேன். தமிழர்களை பாதிக்கும் விஷயங்களை முதலில் விவாதிக்க வேண்டும்" என்றார். பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், பொன். ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் போலும் என்று கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்