Skip to main content

இந்திய அளவில் டிரண்டாகும் கலைஞர் ஹேஷ்டேக்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
 


திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், கருணாநிதி, காவேரி மருத்துவமனை ஹேஷ்டேக்குள் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் அவர் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கலைஞரின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே கடந்த 5ஆம் தேதி கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை தந்தார். அப்போது, அவர் கலைஞரை நேரில் சந்திப்பார் என்றும் துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மருத்துவமனை வந்த போது அவர்கள் கலைஞரை தீவிர சிகிச்சை பிரிவில் சந்திக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையின் போதும் அதே எதிர்பார்ப்போடு தொண்டர்கள் காத்திருந்தனர்.

குடியரசுத் தலைவரும் தான் மருத்துவமனையை விட்டு புறப்பட்ட சில மணி நேரத்தில் அவர் கலைஞரை நேரில் சந்தித்தாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் கலைஞரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் நலம் விசாரிப்பது போன்ற புகைப்படங்கள் தான் வெளியிடப்பட்டது. அதேபோல், கலைஞர் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் மத்தியில் ஒரு பதட்ட சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், திங்கட்கிழமையான நேற்று காலை முதலே கலைஞர் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. காவேரி மருத்துவமனை சுற்றுவட்டாரம் சற்று பதற்றமாகவே இருந்தது. ஸ்டாலின், அழகிரி இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர். பிற்பகல் நேரத்தில் தயாளு அம்மாள் முதல் முறையாக மருத்துவமனை வருகை தந்தார். இத்தனை நாட்களில் கலைஞரைப் பார்க்க நேரில் வராத தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தது மேலும் பதட்டத்தை உருவாக்கியது.

இதனால், காவேரி மருத்துவமனைக்கு தொண்டர்கள் படையெடுக்க தொடங்கினர். இந்நிலையில் நேற்று மாலை சரியாக 6.30 அளவில் காவேரி மருத்துவமைனயின் அறிக்கை வெளியானது. அதில், கலைஞரின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைப் பராமரிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. இதற்கு அவரது வயது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில், கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பதன் அடிப்படையிலேயே அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டிருந்தது.

இதனால், தொண்டர்கள் மத்தியிலும் பிற கட்சி தலைவர்கள் மத்தியிலும் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் ஒரு பதற்றம் பற்றியது. இதையடுத்து, காவேரி மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே ட்விட்டரிலும் கருணாநிதி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் காவேரி ஹாஸ்பிட்டல் ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.