Skip to main content

“தமிழர் என்ற தகுதி இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை” - புத்தகக் கண்காட்சியில் முதல்வர் உரை

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

 

 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46 ஆவது புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சிக்காக கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் 6 எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய முதல்வர், “எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவது நாட்டில் அறிவொளி பரவ வேண்டும் என்பதற்குத்தான். வீட்டிற்கு ஒரு நூலகம் அமைய வேண்டும் என ஆசைப்பட்டவர் பேரறிஞர் அண்ணா. அத்தகைய நோக்கத்தை உருவாக்கவே மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளைச் செய்கிறது. புத்தகங்களின் மீது காதல் கொண்டவர் கலைஞர். 

 

மதுரையில் கலைஞர் பெயரால் 114 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு அது திறக்கப்பட உள்ளது. ஏராளமான தமிழ்காப்புத் திட்டங்களை திராவிட அரசு செயல்படுத்துகிறது. பதிப்பகங்களோடு போட்டிப் போட்டு தமிழக அரசு ஏராளமான நூல்களை வெளியிடுகிறது. சென்னையில் நிரந்தரமாக புத்தகப்பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக் காலத்தில் தமிழுக்கும் எழுத்துக்கும் அளவில்லாத ஆக்கப் பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதை யாராலும் மறக்க முடியாது. எழுத்தும் இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல காக்கின்றன. இது போன்ற புத்தகச் சந்தைகளும் இலக்கிய விழாக்களும் இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டப் பயன்படுகிறது.

 

மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம் பண்பாடு சிதைந்து விடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நாம் இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை. எனவே மொழியைக் காப்பதற்கான கடமை என்பது எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளர்களுக்கும் இருந்தாக வேண்டும். தங்களது எழுத்தை மொழி காப்பதற்கான மக்கள் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும்” எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.