Skip to main content

'அந்த மகளிர் சொன்ன ஒரு வார்த்தை போதாதா நமக்கு'-ஈரோட்டில் முதல்வர் பேச்சு 

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
 'Isn't a word said by those women enough for us?'- Erode Chief Minister's Speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஈரோடு சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பிரச்சார மேடையில் பேசுகையில், ''சட்ட ஒழுங்கு சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அதிமுக ஆட்சி. பாரபட்சமின்றி அனைவரும் பொதுவான ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். அனைத்து மக்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் நல்லாட்சி நடத்தி வருகிறோம். நாட்டைக் காக்க ஜனநாயக போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க நான் இங்கு வந்துள்ளேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

இது பரப்புரை கூட்டமாக அல்லது மாநில மாநாடா? என்ற கேட்கும் அளவிற்கு இங்கு திரண்டு வந்திருக்கிறீர்கள். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் நற்சாட்சி பத்திரம் போல் வரவேற்புகளை வழங்கி அலை அலையாய் மாநாட்டிற்கு வருவது போல் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் கிடைக்கிற மாதிரி நல்லாட்சியை நாங்கள் வழங்கி வருகிறோம்.

நான் அடிக்கடி தமிழக முழுவதும் திட்டங்களை ஆய்வு செய்வதற்கு பயணிப்பேன். அப்படி சேலத்தில் நடைபெற்ற ஆய்வில் பொதுமக்களை சந்தித்து நம்முடைய அரசு திட்டங்கள் எப்படி செயல்படுகிறது; ஏதாவது குறை இருக்கிறதா; இல்லை திட்டங்களை செழுமைப்படுத்த ஏதாவது கருத்துக்கள் இருக்கிறதா என்று கேட்டேன். அதில் மகளிர் ஒருவர் சொன்ன கருத்து என்னால் மறக்க முடியாது. ரொம்ப எதார்த்தமா சொன்னாங்க.

'ஐயா என்னுடைய கணவர் பெயிண்டர். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. என்னுடைய கணவருக்கு பெயிண்டிங் வேலை தொடர்ந்து இருக்காது. சம்பாதிக்கிற காசு வீட்டு செலவுக்கே சரியா போயிடும். நானும் வீட்டு வேலைக்கு போகிறேன். மூன்றாவது படிக்கிற என்னுடைய குழந்தை காலையில் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. வேலை செய்யும் போது இதையே நினைத்து கஷ்டப்பட்டு கொண்டு இருப்பேன். இப்போ அந்த கஷ்டம் இல்லை. நீங்கள் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தால் காலையில் என் குழந்தை பள்ளிக்கு போய் நல்லா சுவையாக சாப்பிடுகிறார். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பெரிய உதவி. எங்க செலவு போக மீதியை பெண் குழந்தை பேரில் பக்கத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் தொடங்கி சேமிக்க தொடங்கி விட்டேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது வெறும் ஆயிரம் ரூபாயாக இருக்கலாம். ஆனால் என் குழந்தையின் எதிர்காலத்திற்கான பணம். என் குழந்தைக்கு சாப்பாடு போட்டு பணமும் கொடுக்கின்ற நீங்கள் நல்லா இருக்கணும்' என்று அந்த தாய்மார் சொன்னார். இது போதாதா நமக்கு இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்'' என பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.