Skip to main content

திரைப்படத்தில் நடிக்கும் ஆசை; சென்னைக்கு புறப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவர்கள் 

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

interest in become a film actors so eighth standard students came in chennai 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் அருகே உள்ள களமருதூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் வெவ்வேறு பள்ளிகளில் படித்தாலும்  ஒரே பகுதியில் வசித்து வந்ததால் ஊரில் அடிக்கடி ஒன்றாக விளையாடி அதன் மூலம் நண்பர்களாக இருந்துள்ளனர்.

 

இவர்கள் மூவரும் நேற்று முன் தினம் காலை களமருதூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். மாலை வரை வீட்டிற்குத் திரும்பாததால் பிள்ளைகளின் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். மேலும் அருகில் உள்ள உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர்.  அங்கும் இவர்கள் இல்லாததால் அதன்பிறகு திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து  வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உளுந்தூர்பேட்டை செல்லும் அரசு பஸ் மூலம் மூன்று மாணவர்களும் ஏறிச் சென்றதாக சிலர் தகவல் கூறியுள்ளனர்.

 

இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் சிறுவர்களில் ஒருவனின் அத்தை வீட்டில் மூன்று சிறுவர்களும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்னைக்குச் சென்ற போலீசார் அங்கிருந்து மூன்று மாணவர்களையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், களமருதூரில் இருந்து உளுந்தூர்பேட்டை பஸ்ஸில் வந்து இறங்கிய மூவரும் உளுந்தூர்பேட்டையிலிருந்து சிதம்பரம் செல்லும் பஸ்ஸில் சிதம்பரம் சென்றுள்ளனர். சிதம்பரத்திலிருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறியுள்ளனர்.

 

எதற்காக சென்னைக்குச் சென்றார்கள் என்பது குறித்து கேட்டபோது திரைப்படத்தில் நடிக்கும் ஆவலில் புறப்பட்டுச் சென்றதாகக் கூறியுள்ளனர். காணாமல் போன சிறுவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த காவல்துறையினருக்கு சிறுவர்களின் பெற்றோர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.