Skip to main content

கரோனா ஊரடங்கால் பழமையான பழக்கங்களை மாற்றி நடந்த துக்க நிகழ்ச்சி!!!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

திருவிழாக்கள், திருமணங்கள், சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பழைய பாராம்பரிய பழக்கவழக்கங்கள் மாறாமல் இன்று வரை நடந்து வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, அணவயல், மறமடக்கி, குளமங்கலம் உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடக்கும் துக்க நிகழ்ச்சிகளில் பழைய பழக்கங்கள் மாறாமல் நடந்து வருகிறது. அதாவது துக்க நிகழ்ச்சியில் ஆண்கள் அனைவரும் மேல் சட்டையை கழற்றிவி்ட்டு இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு அனைவரும் சமம் என்று கலந்து கொள்வதுடன் துக்க வீட்டாரின் கைகளை தழுவி நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்லி செல்வார்கள்.
 

 

incident in pudukottai

 

அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள்.. 15 நாட்கள் வரை துக்க வீட்டார் மற்றும் அவர்களது பங்காளிகள் வீட்டில் சமைக்க மாட்டார்கள் என்பதற்காக தினசரி உணவும், அடுத்த பல நாட்களுக்கான உணவு தயாரிக்க அரிசி, காய்கறிகள் கொடுப்பதும் வழக்கம். மேலும் பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அழுது துக்கத்தை பகிர்ந்து கொள்வார்கள்.
 

nakkheeran app



இறப்பு நாளில் கலந்து கொள்ளமுடியாத உறவினர்கள் 8 வது நாளில் நடக்கும் 8 ம் நாள் சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரிப்பார்கள். அப்போது நடக்கும் படையல் நிகழ்ச்சிக்கு மாமன் முறையினர் கீழே அமர்ந்திருக்க, துக்க வீட்டு பங்காளிகள் கைகளை கட்டிக் கொண்டு நின்று படையலுக்கு உத்தரவு கேட்பார்கள். மாமன் முறையினர் உத்தரவு கொடுத்த பிறகே படையல் நிகழ்ச்சி முடியும்.


 

incident in pudukottai

 

தற்போது கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலும் ஒருவரை ஒருவர் தொடக் கூடாது. ஒரு மீட்டர் இடைவெளி வேண்டும் என்பதாலும் துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தின் முதுபெரும் தலைவர் சிவசாமி சேர்வை கடந்த வாரம் இறந்துவிட்டார். அவரது இறப்பில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் செவ்வாய் கிழமை நடந்த 8 ம் நாள் நிகழ்ச்சியில் துக்க வீட்டார் சமூக இடைவெளியில் வட்டம் அமைத்து  கைகூப்பி  நிற்க உறவினர்கள் இடைவெளி விட்டு சென்றனர். கை தழுவி ஆறுதல் சொல்லவில்லை. அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிக் கொண்டதுடன் சமூக இடைவெளி விட்டு வட்டத்தில் போடப்பட்டிருந்த சேர்களில் அமர்ந்திருந்தனர்.அதே போல பெண்களும் கட்டி அழவில்லை. இடைவெளி வட்டத்தில் அமர்ந்திருந்தனர். சமூக இடைவெளியோடு விவசாய சங்க போராளியின் 8 ம் நாள் சடங்கு நடந்து முடிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்