
சென்னையில் ரவுடிகள் இரண்டு பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவரும், இவரது நண்பர் படப்பை சுரேஷ் என்பவரும் கோட்டூர்புரம் அருகே நேற்று இரவு மது குடித்துவிட்டு படுத்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு வருவதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதில், படுகாயமடைந்த படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் உயிரோடு இருந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருணின் காதலியை சுக்கு காபி சுரேஷ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்துள்ளார். அதற்கு பழிதீர்ப்பதற்காக அருண் திட்டமிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த சுக்கு காபி சுரேஷ், அருணையும் அவரது அண்ணன் அர்ஜுனையும் கொலை செய்வதற்காக நேற்று இரவு தனது கூட்டாளிகளுடன் வந்துள்ளார். ஆனால், அர்ஜுன் எனக் கருதி படப்பை சுரேஷை அவர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இரண்டு பேரை கொடூரமாக வெட்டிக் கொன்ற சுக்கு காபி சுரேஷ் மற்றும் அவரது கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.