Skip to main content

மணல் கடத்திவந்த டிராக்டர் மோதி பந்தல் அமைப்பாளர் உயிரிழப்பு! காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

incident in dindigul


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மணல் கடத்திவந்த டிராக்டர் மோதியதில் பந்தல் அமைப்பாளர் ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால், நிலக்கோட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியைச் சேர்ந்தவர் போத்திராஜா பாண்டியன். பந்தல் அமைப்பாளரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் அணைப்பட்டியிலிருந்து தன்னுடன் பணியாற்றும் ஊழியர் ஒருவரை எஸ்.மேட்டுப்பட்டியில் இறக்கிவிட சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில் போத்திராஜா பாண்டியன் மேட்டுப்பட்டி அருகே ஒரு கழிவுநீர்க் கால்வாயில், காயத்துடன் கிடப்பதாக தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சென்று காயத்துடன் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி போத்திராஜா பாண்டியன் உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறி நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பவத்தன்று போத்திராஜா பாண்டியன் மீது மணல் கடத்திச் சென்ற டிராக்டர் மோதியதில்தான் படுகாயமடைந்து பலியாகி உள்ளார் என்ற அதிர்ச்சியான தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்ப ட்டுள்ளது. அதில் எஸ். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த காளவாசல் வைத்திருக்கும் பிரமுகரின்  டிராக்டர் மோதியதில்தான் தன் மகன் உயிரிழந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவரது தந்தை அருள்பாண்டி புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

incident in dindigul


இந்தநிலையில் புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த போத்திராஜா பாண்டியனின் பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள் நிலக்கோட்டை காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீதும், அதற்கு உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் அலட்சியம் செய்வதால் மணல் கொள்ளையர்களினால் இது போன்ற உயிர்பலிகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்