Skip to main content

“ஆளுநருக்கு நான் அன்புடன் ஒரு கோரிக்கை வைக்கிறேன்”- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

"I am making a request to the Governor" - Tamil Nadu Congress President KS Azhagiri

 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட அளுநர் ஆர்.என்.ரவி, “திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு போப் சரியாக மொழிப்பெயர்க்கவில்லை. ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதனை தவறாக மொழிபெயர்த்துள்ளார். மேலும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருக்குறள் இந்தியாவின் அடையாளம்” எனக் கூறியிருந்தார். 

 

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், தனக்கு தெரியாத திருக்குறளை பற்றி ஆளுநர் ரவி கருத்துகளை சொல்லக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

 

செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் ஆன்மீகத்தை சொல்லுகிறது.ஆனால் அதை மொழிபெயர்த்தவர்கள் அதை சரியாக மொழிபெயர்க்கவில்லை என அவருக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி கருத்து சொல்லுகிறார். பொதுவாகவே நமக்கு தெரிந்த விஷயங்களில் தான் கருத்து சொல்லவேண்டும். அதிலும் படித்தவர்கள் தனக்கு தெரியாத விஷயங்களை பற்றி கருத்து சொல்லுவது உகந்தது அல்ல. 

 

திருக்குறள் என்பது உலகப்பொதுமறை. அது எந்த மதத்தையோ மனிதனையோ அது புகழ்ந்தோ வியந்தோ பாராட்டியது இல்லை. பகவத்கீதை அது இந்து தர்மத்தை பற்றி சொல்லுகிறது. குரான் இஸ்லாமிய தர்மத்தை பற்றி சொல்லுகிறது. பைபிள் கிறிஸ்தவ தர்மத்தை பற்றி பேசுகிறது. ஆனால் திருக்குறள் இவற்றில் வேறுபட்டது. 

 

திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் மட்டும் மொழிப்பெயர்ப்பு எழுதப்படவில்லை. பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். ஆளுநர் இதை எல்லாம் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அல்லது தெரிந்தவர்களுடன் விவாதிக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் அரசியல் சார்புடையவர்களுடன் கலந்து பேசி இது போன்ற கருத்துகளை சொல்லுதல் கூடாது என நான் அவருக்கு அன்புடன் கோரிக்கை வைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்