Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; மனைவியை கோவிலுக்குள் வைத்து கொடூரமாகக் கொன்ற கணவன்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

 husband brutally incident his wife by putting her in a cage

 

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவனின் செயல் தென்காசி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கண்ணன். இவரது மனைவி சுமதி. வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மேலும், இந்த காதல் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கண்ணனுக்கு சரியான வருமானம் கிடைக்காததால், இவர்கள் குடும்பம் வறுமையில் வாடியுள்ளனர். இதனிடையே, கண்ணனின் மூத்த மகள் தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திக்கொண்டார். இந்தச் சூழலில் கண்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் சுமதி காதுக்கு வரவே, கணவன் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.

 

அதே நேரம், கண்ணனுக்கு கிடைக்கும் வருமானத்தை வீட்டில் கொடுக்காமல், குடிப்பதையே தொழிலாக வைத்து வந்துள்ளார். ஆனால், சுமதியோ சிறு சிறு தொழில்கள் செய்து, அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் தன்னுடைய மகள்களை வளர்த்திருக்கிறார். இதனிடையே, கடந்த 13 ஆம் தேதியன்று மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் கண்ணனுக்கும் சுமதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

அப்போது, “ரெண்டு பொம்பள புள்ளிங்கள பெத்து வெச்சிக்கிட்டு நீங்க செய்றது நியாயமா?” என கண்ணனிடம் சுமதி சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணன், தன் மனைவி என்று கூட பார்க்காமல் சுமதியை ஓட ஓட அடித்து விரட்டியுள்ளார். இதில் வலி தாங்க முடியாத சுமதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலுக்குள் ஓடி ஒளிந்துள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற கண்ணன் கோயிலுக்குள் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே, கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

 

இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சுமதியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே நேரம், தப்பி ஓடிய கண்ணனை ஆலங்குளம் போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர். இதையடுத்து, அத்தியூத்து கிராமப் பகுதியில் பதுங்கியிருந்த கண்ணனை மடக்கி பிடித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.