Skip to main content

முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

The High Court upheld the conviction of the ex-minister's wife

 

கடந்த 1991 - 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஏ.எம். பரமசிவன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ஏ.எம். பரமசிவன் மற்றும் அவரது மனைவி நல்லம்மாள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

 

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஏ.எம். பரமசிவனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எம். பரமசிவன் மனைவி நல்லம்மாளுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. அதனைத் தொடர்ந்து இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஏ.எம். பரமசிவன் மற்றும் அவரது மனைவி நல்லம்மாளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எம். பரமசிவன் மரணமடைந்தார்.

 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில், மறைந்த அமைச்சர் ஏ.எம். பரமசிவனின் மனைவி நல்லம்மாளின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன், குற்றம் சாட்டப்பட்ட நல்லம்மாளுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்ததுடன் தண்டனையை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்