Skip to main content

       புதுக்கோட்டையில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்         ஆய்வுக்கூட்டம்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
govt

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு  07-05-2018(திங்கட்கிழமை) அன்று காலையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிக்பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு  அன்று மதியமும் 2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான முனனேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்திற்கு  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது,  ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியரின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கு சிறப்பான வழிகாட்டலை மேற்கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்காக ஆசியர்களுடன் இணைந்து  செயல்படும்போது அப்பள்ளியானது சிறப்பான நிலையினை அடையும். வரும் கல்வி ஆண்டில் பள்ளி திறப்பதற்கு முன்பாக தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கான கூட்டத்தினையும், பெற்றோர் ஆசிரியர்கழகத்திற்கான கூட்டத்தினையும் நடத்தி பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கவேண்டும். மாணவர்களுக்கு வழங்கவேண்டிய பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை  பள்ளித்திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு வழங்கிடவேண்டும். அரசுப்பள்ளிகளின் சிறப்பம்சத்தினை பொதுமக்களிடம் சரியான முறையில்கொண்டு சென்று இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்கவேண்டும். 

 

அனைத்து முன்னேற்பாடுகளையும் பள்ளி திறப்பதற்கு முன்பு செய்ய அறிவுறுத்தல். பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்றே தேர்வு முடிவினை அறிந்துகொள்வதற்கும், மாணவர்களின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து சான்றிதழ்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.   பள்ளித்திறப்பதற்கு முன்பாக பள்ளி வளாகத்தூய்மை, குடிநீர்வசதி, கழிப்பறை சுகாதாரம் ஆகியவை சிறப்பாக பராமரிப்பு பணிமேற்கொள்ளவேண்டும். இலவச கட்டாயக்கல்விச்சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதை மெட்ரிக்பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உறுதிசெய்யவேண்டும். குறிப்பாக வரும் கல்வி ஆண்டிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பள்ளி திறப்பதற்கு முன்பு  தலைமையாசிரியர்கள் செய்யவேண்டும். வரும் கல்வி ஆண்டில் இவ்வாறாக ஒவ்வொரு தலைமையாசிரியரும் சிறப்பாக செயல்பட்டு  கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்டம். தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக வருவதற்கு பாடுபடகேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த அய்வுக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை சாமி.சத்தியமூர்த்தி, அறந்தாங்கி(பொ) கே.திராவிடச்செல்வம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.இரவிச்சந்திரன்,  மவாட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொ) ஆர்.தங்கராஜ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(இடைநிலைக்கல்வி) ஆர்.கபிலன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.ஜெயராமன், அறந்தாங்கி சி.செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.