ஸ்ரீவில்லிபுத்தூரிலும் பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, வழக்கம்போல் செய்தியாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
என்ன நடந்தது?
கடந்த 2018-ல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, இருக்கன்குடி மற்றும் விருதுநகர் பஜார் காவல் நிலையங்களில், அறநிலையத்துறை அலுவலர் ஹரிஹரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவானது. இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எச்.ராஜா, நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியில் டென்ஷனாகி “நீங்க யாரு? எதுக்கு ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குறீங்க? நீங்க எல்லாரும் அறிவாலயத்தின் கைக்கூலிகள். நான் சொல்லுறத ரிப்போர்ட் பண்ணுறதுதான் உங்க வேலை.” என்கிற ரீதியில் பேசிக்கொண்டே போக, செய்தியாளர்கள் தரப்பிலிருந்து ‘அது எப்படி கேள்வி கேட்கும் செய்தியாளர்களை நீ யாரென்று கேட்கலாம்?’ என எகிற, வாக்குவாதம் நீடித்தது. தொடர்ந்து எச்.ராஜா “நான் பேசுவது அனைத்தும் செய்தியாக வரவேண்டும். வராவிட்டால், அந்தச் சேனலை நடத்துபவர்கள் இந்து விரோதிகள்..” எனப் பொத்தாம் பொதுவாகத் தாக்கிப்பேச, எச்.ராஜாவின் கண்ணியமற்ற பேச்சுக்கு. செய்தியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க, ‘நீங்க யாராக வேண்டுமானாலும் இருந்துட்டுப் போங்க..’ என்று மழுப்பலாகப் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
கேள்வி கேட்கும் செய்தியாளரைப் பார்த்து ‘யார் நீங்க?’ எனக் கேள்வி கேட்பது தவறான அணுகுமுறை என்பதை, ஸ்ரீவில்லிபுத்தூர் செய்தியாளர்கள் எச்.ராஜவுக்கு உணர்த்த, அவரும் வேறுவழியில்லாமல் அடங்கிப்போனது நடந்துள்ளது.