Skip to main content

அரசாங்க அதிகாரிகள் எந்திரம் போல செயல்படுறாங்களா?

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீனியர் தலைவரான நல்லகண்ணு குடியிருந்த வீட்டை, எடப்பாடி அரசு அதிரடியாகக் காலி செய்ய வைத்த விவகாரம் தமிழக அரசியலில் நல்லவங்களுக்கு இதுதான் நிலைமையான்னு அணைத்து தரப்பு மக்களையும் கோபப்பட வைத்துள்ளது.  மூத்த தோழர் நல்லகண்ணு 94 வயதைக் கடந்திருக்கும் சீனியர் தலைவர். முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரான அவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் உதாரணமா வாழ்ந்துக்கிட்டு இருக்கார். அவரை காலி செய்யச் சொன்னா யார்தான் ஏத்துக்குவாங்க என்று பெரும் கேள்வியையும்,விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

nallakannu



சொந்த வீடுகூட இல்லாத எளிமையான தலைவரான நல்லகண்ணுவுக்கு 2007 தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீடு ஒதுக்கித்தந்தார் கலைஞர். குறைந்த வாடகை கொண்ட அந்த குடியிருப்பில்தான் முன்னாள் அமைச்சர் கக்கன் வாரிசுகளும் இன்னொரு வீட்டில் இருக்காங்க. குடியிருப்பு பழசாயிட்டதால, புதுசா கட்டணும்ங்கிற திட்டத்தின்படி, நல்லகண்ணு-கக்கன் குடும்பத்தினர் உள்பட எல்லோரையும் காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது வீ.வ.வாரியம். பலரும் கோர்ட் வரைக்கும் போய் எதுவும் நடக்கலை. நல்லகண்ணு அய்யாவோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அரசு நோட்டீஸை மதிச்சி, வீட்டைக் காலி பண்ணிட்டாரு. 
 

kakkan



இது தெரிஞ்சதும் தி.முக. தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தோழர் நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கணும்னு அறிக்கை விட்டாங்க. துணை முதல்வர் ஓ.பி.எஸ்சும் நல்லகண்ணு அய்யாகிட்ட போனில் பேச, அவருக்கும் கக்கன் வாரிசுகளுக்கும் மாற்று வீடு ஒதுக்கப்படும்னு அரசாங்கம் அறிவிச்சிருக்கு. அரசுக் குடியிருப்பைக் காலிசெய்யச் சொல்லும் போது அங்கே யார் யார் குடியிருக்காங்கன்னு தெரிஞ்சிக்க வேணாமா?  அரசாங்க அதிகாரிகள் எந்திரம் போல செயல்படுறாங்கனு பல்வேறு தரப்பும் கூறிவருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 02/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். இந்த நிகழ்வில், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாச்சலம், மாநிலச் செயலர் இரா.முத்தரசன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். 

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்