Skip to main content

எம்எல்ஏ சீட் கேட்ட அரசு ஒப்பந்த பெண் ஊழியர் டிஸ்மிஸ்!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

Government contract female employee dismissed for asking for MLA seat in DMK!

 

சேலத்தில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த பெண் ஒப்பந்த ஊழியரை அதிரடியாக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் திலகவதி. தலைவாசலில் வேளாண்மைதுறை உதவி தொழில்நுட்ப மேலாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

 

இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஏற்காடு (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். மார்ச் 4ம் தேதி நடந்த வேட்பாளர் நேர்காணலிலும் கலந்துகொண்டார். இதை சிலர் வீடியோவில் பதிவுசெய்து சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராமனுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களிலும் பரவியது.

 

அரசுத்துறையில் நிரந்தர அல்லது ஒப்பந்த ஊழியராக உள்ளவர்கள் பணிக்காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாளராகவோ, தேர்தலில் போட்டியிடுவதோ கூடாது என்பது நடத்தை விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்கூட்டியே பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடலாம். இதையடுத்து, திலகவதியை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ராமன் அதிரடியாக உத்தரவிட்டார்.

 

இதுகுறித்து திலகவதி கூறுகையில், ''நான் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறேன். ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்ததன் பேரில், கடந்த 4ம் தேதி நேர்காணலிலும் கலந்துகொண்டேன். ஆனால், மார்ச் 1ம் தேதியே என்னை பணிநீக்கம் செய்ததாக உத்தரவிட்டுள்ளனர்.

 

என் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதுகுறித்து நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் அப்படியான நடவடிக்கைகள் ஏதுமின்றி திடீரென்று பணிநீக்கம் செய்துள்ளளதாக உத்தரவு வந்தது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தால் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும். விருப்ப மனு கொடுத்ததற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது முரணாக உள்ளது. எனக்குத் தெரிந்து சில அரசு ஊழியர்களும் கூட தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், நான் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்ததாலேயே பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்,'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.