Skip to main content

கோடிக் கணக்கில் மோசடி; விசிக பெண் நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

goondas case registered against VCk woman executive arrested on fraud complaint

 

சேலத்தில், மோசடி புகார்களில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி காயத்ரி உள்ளிட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

 

சேலம் அம்மாபேட்டை பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி(43). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். இவர் சமூக நலத்துறையில் உயர் அதிகாரி பொறுப்பில் இருப்பதாகக் கூறி, தொளசம்பட்டியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரிடம் அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அவரிடமிருந்து 24 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். ஆனால் உறுதியளித்தபடி காயத்ரி அரசாங்க வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் போக்கு காட்டி வந்துள்ளார்.     

 

சந்தேகத்தின் பேரில் மஞ்சுளாவும், அவர் மூலமாகப் பணம் கொடுத்த மேலும் சில பெண்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் காயத்ரி அங்கு பணியாற்றவில்லை என்பது  மட்டுமின்றி, அவர் அரசுத் துறையிலேயே இல்லை என்பதும், பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதும் அவர்களுக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றதை அறிந்த காயத்ரி, திடீரென்று தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் அவர் மீது மேலும் சிலர் புகார்  அளித்தனர்.     

 

அடுத்தடுத்து காயத்ரி மீது மோசடி புகார்கள் வரத் தொடங்கிய நிலையில்தான் அவரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகளை அமைத்து மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இரண்டு மாத தீவிர தேடுதலில், சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் அருகே ஒரு வீட்டில் காயத்ரியும்,  அவருடைய கூட்டாளிகளான ராஜசேகர், அசோக்குமார் ஆகியோரும் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.     

 

காவல்துறை விசாரணையில், அவர் பல பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய்  மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. மதியழகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 42 லட்சம் ரூபாயும், ஒரு காரும் வாங்கிக் கொண்டு ஏமாற்றி இருக்கிறார். வாசுதேவன் என்பவரின் மகளுக்கு அரசு உத்தியோகம் வாங்கித் தருவதாகச் சொல்லி 21 லட்சம் ரூபாய், சேலத்தாம்பட்டி அமுதாவிடம் தாட்கோ துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 42 லட்சம் ரூபாய், அழகாபுரம் விஜயாவிடம் மானியக் கடன் பெற்றுத் தருவதாகச் சொல்லி 5.30 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

 

ஆத்தூர் காளீஸ்வரன் என்பவரிடம் கட்சிப் பணிகளுக்குத் தேவைப்படுவதாகச் சொல்லி 8 லட்ச ரூபாயும், 1.70 லட்ச ரூபாய் செலவில் சிறுத்தை சிலை, வேல், கேடயம் ஆகியவற்றையும் செய்து வாங்கிக் கொண்டுள்ளார். இவற்றின் மூலம் காயத்ரி 25க்கும் மேற்பட்டோரிடம் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது ஒருபுறம் இருக்க, காயத்ரி மீது கடந்த காலங்களிலும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளதாகவும், அப்போதும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். 

 

அதுபற்றியும் காவல்துறை தரப்பில் விசாரித்தோம். “கடந்த 2021ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து 18 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் அப்போது காயத்ரி, இவருடைய  கூட்டாளிகள் லெனின், அசோக்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து இருந்தனர். அதே ஊரைச் சேர்ந்த சில பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து, ஒரு கோடி ரூபாய் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். கள்ளக்குறிச்சி வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அசோக்குமார்தான் இப்போதும் சேலம் மத்தியக் குற்றப்பிரிவினரால் கைது  செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கூட்டாளியான லெனின்தான், காயத்ரியை சமூக வலைத்தளங்களில் 'சேலம் காயத்ரி பிரதர்ஸ்' என்ற பெயரில் புரமோஷன் வேலைகளைச் செய்து வந்துள்ளார். இவரிடம் யாராவது பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டால், அவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுவார். அடித்து, உதைப்பார்.  ஆத்தூர் அருகே தொழிலதிபர் ஒருவரைக் கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கிலும் காயத்ரி சில ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்” என்கிறார்கள் காவல்துறையினர்.  

 

இந்நிலையில்தான் மீண்டும் மோசடி புகார்களின் பேரில் காயத்ரியை அண்மையில் சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர் பிணையில் வெளியே வந்தால் புகார்தாரர்களை மிரட்டுவார் என்பதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை  முடிவு செய்தது. இதையடுத்து காயத்ரியை நவ. 18 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, அவரை சேலம் பெண்கள் கிளைச் சிறையில் இருந்து கோவை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். காயத்ரியின் கூட்டாளிகளான அசோக்குமார், லெனின் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் காயத்ரி குண்டர் சட்டத்தில் கைது ஆகியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இதற்கிடையில் காயத்ரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.