Skip to main content

கடன்களை ரத்து செய்த டீ கடைக்காரர்.. வரவேற்கும் மக்கள்!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
t

 

 கஜா புயல் தாக்கி வீடுகள், மரங்கள், பயிர்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் வாழ்வாதரம் இழந்து தவித்து வருகின்றனர்.


  ஊருக்கெல்லாம் சோறுபோட்ட விவசாயி ஒரு வேலை சோத்துக்காக கையேந்தும் நிலை வந்தது. அரசாங்கம் அந்த உணவை கூட சரிவர கொடுக்கவில்லை. தன்னார்வ தொண்டர்களும் உள்ளூர் இளைஞர்களும் மீட்பு பணி செய்து கிராமங்களை சீர்படுத்தி வருகின்றனர். 

 

தொடக்கத்தில் தீவிரமாக களமிறங்கிய மின்வாரிய ஊழியர்கள் 10 நாளில் மந்தமானார்கள்.
  நிவாரணம் கொடு.. மின்சாரம் கொடு.. விவசாய கடன்களை ரத்து செய்.. கல்விக் கடனை ரத்து செய் என்று கோரிக்கை வைத்து போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த குரல் அரசாங்கத்துக்கு கேட்கவில்லை.  கண்துடைப்பு ஆய்வுகளை செய்துவிட்டு முடங்கி கிடக்கிறது அரசு.


விவசாயிகளின் இந்த கோரிக்கை அரசுக்கு கேட்டதோ இல்லையே ஒரு டீக்கடைகாரருக்கு கேட்டுள்ளது.  ஆம்,   புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள வம்பன் 4 ரோட்டில் டீ கடை நடத்தும் சிவக்குமார் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தனது வாடிக்கையாளர்களின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்து பதாகையே வைத்துவிட்டார். இதைப் பார்த்த மக்கள் இந்த டீ க்கடை காரருக்கு கேட்டது அந்த டீ க்கடை காரருக்கு கேட்கலயே என்கின்றனர்.


கடன்களை ரத்து செய்த சிவக்குமார்.. எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு. எல்லாம் கிராமத்துக்காரங்க தான். இப்ப கஜா பயல் தாக்கியதில் மொத்த கிராமங்களும் அழிஞ்சு போச்சு.  விவசாய பயிர்கள் ஒருபக்கம் புயல்ல பாதிச்சது.. தப்பிய பயிர்களை காக்க  இப்ப கரண்டு இல்லாம கருகுது.. இப்படி எல்லா வகையிலயும் விவசாயிகள் பாதிக்கப்படும் போது விவசாய வேலை செய்ற மக்களுக்கு எங்கே வேலை இருக்கும். இவங்க தான் என் வாடிக்கையாளர்கள். அவங்க ஒரு நாள் 2 கடன் சொல்லி டீ குடிச்சவங்க அதுக்கு பிறகு காசு இல்லாம கடன் சொல்ல வெட்கப்பட்டு வராம போனாங்க. அவங்க நிலமை எனக்கு புரியுது.. அங்க கொடுத்த காசுல தான் நான் சாப்டேன். அதனால ஒரு முறை அவங்க கொடுத்த காசுல கொஞ்சத்தை ரத்து செய்யலாம்னு முடிவெடுத்தேன் ரத்து செஞ்சுட்டேன்..  இவங்க எல்லாம் யாரு அம்பானிகளா பாவம் விவசாயிகள் தானே.. என் தகுதிக்கு டீ கடனை ரத்து செஞ்சுட்டேன்.. அரசாங்கம் அவங்க தகுதிக்கு விவசாய கடனையும் கல்விக்கடனையும் ரத்து செஞ்சா நல்லா இருக்கும் என்றார்.


 

சார்ந்த செய்திகள்