Skip to main content

பட்டியல் சமூக வாலிபரை அவமானப்படுத்திய முன்னாள் திமுக நிர்வாகி கைது! 

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Former DMK executive arrested for humiliating youth!

 

சேலம் அருகே, மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்ட பட்டியல் சமூக இளைஞரை, சாதிய வன்மத்துடன் முன்னாள் திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் அருகே உள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பிரவீன்குமார் (22). கூலித்தொழிலாளி. அப்பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் தற்போது திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், ஜன. 26ம் தேதி இரவு 8.30 மணியளவில், பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது கோயிலுக்கு வெளியே அமர்ந்து இருந்த வெங்கடாசலம், கூழை கவுண்டர் ஆகிய இருவரும், ''நீ ஏன்டா கோயிலுக்குள் வந்தாய்? உங்களை எல்லாம் உள்ளே வரக்கூடாதுனு சொல்லி இருக்கிறோம்ல'' என்று கூறி, அவரை அடிக்கப் பாய்ந்தனர். 

 

இதையடுத்து, மறுநாள் காலை (ஜன. 27) கோயில் வாசலுக்கு வந்த சேலம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கத்தின் முன்பு, பிரவீன்குமாரை சிலர் அழைத்துச் சென்று நிறுத்தினர். அங்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், கூழை கவுண்டர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது மாணிக்கம், வாலிபரை பார்த்து ஆபாச சொற்களால் திட்டியுள்ளார். ''உன்னை யாருடா கோயிலுக்குள் போகச்சொன்னது? நீங்கள் கோயிலுக்கு வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது? தொலைச்சுடுவேன்'' என்று மிரட்டியபடியே வாலிபரை நெஞ்சில் தாக்கியுள்ளார். 

 

அங்கு பலதரப்பட்ட சமூகத்தினரும் கூடிவிட்ட நிலையில், அப்போதும் ஆக்ரோஷம் அடங்காதவராக மாணிக்கம் அந்த வாலிபரை பதிவு செய்யவே முடியாத அளவிற்கான சொற்களால் திட்டித்தீர்த்தார். கூடியிருந்த பொதுமக்களும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. அப்போது வெங்கடாசலம் என்பவரும் பிரவீன்குமாரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, “இவனை சும்மா விடக்கூடாது” என்றும் மிரட்டினார். 

 

இதையடுத்து பிரவீன்குமாரும், அவருடைய பெற்றோரும் மாணிக்கம் உள்ளிட்ட பிரமுகர்களிடம் மன்னிப்பு கேட்டு, இத்தோடு விட்டுவிடும்படி கெஞ்சினர். அப்போது அவர்கள், இனி ஒருமுறை கோயிலுக்குள் நுழைந்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக, சேலம் தெற்கு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூழை கவுண்டர் உள்ளிட்ட பத்து பேர் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி பிரவீன்குமார் இரும்பாலை காவல்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜன. 30) புகார் அளித்தார். 

 

இந்த புகாரின்பேரில், இரும்பாலை எஸ்.ஐ. சீனிவாசன், மாணிக்கம் உள்ளிட்டோர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள், குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாணிக்கத்தை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

 

இது ஒருபுறம் இருக்க கோயிலுக்குள் நுழைந்ததை கண்டித்து, பிரவீன்குமாரை மாணிக்கம் மிரட்டும் காணொளி காட்சிகள் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை (ஜன. 30) வேகமாக பரவியது.

 

வேங்கைவயல் சம்பவத்தின் சூடு தணிவதற்குள் இப்படியொரு சம்பவம் பொதுவெளியிலும், அரசியல் களத்திலும் சலசலப்பை கிளப்பியதால், சம்பந்தப்பட்ட வாலிபரிடம் இருந்து காவல்துறையினர் புகாரைப் பெற்று சம்பந்தப்பட்ட நபர் மீது வேக வேகமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

இதற்கிடையே, மாணிக்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகே அவர் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.