Skip to main content

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Former DGP Rajesh Das absconding

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த  வழக்கு பல்வேறு நிலைகளை கடந்து நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக சரணடைய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. இந்நிலையில் ராஜேஸ்தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய போலீசார் சென்னை தையூர் கோமநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற நிலையில் அவர் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டின் வாயில் காவலாளிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

சார்ந்த செய்திகள்