Skip to main content

தீயணைப்பு வீரரை கஞ்சா கடத்த வைத்த ஆன்லைன் சூதாட்டம்! 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

fire department person arrested in cannabis issue

 

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெருநகரங்கள் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா போன்ற மாற்றுப் போதைப் பொருட்கள் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. போலீசாரும் முடிந்தவரை பிடித்தாலும் அடுத்தடுத்து கடத்தல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பு கடலோர மாவட்டங்களில் மட்டுமே கடத்தல் கஞ்சா பிடிபட்டு வந்த நிலையில், தற்போது உள்மாவட்டங்களிலும் அடிக்கடி பிடிக்கப்படுகிறது.

 

மதுரை மாவட்டத்திலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கார்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்து. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பாநாடு உள்பட பல இடங்களிலும் வாகன சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு காரை ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் பொன்னியின் செல்வன் நிறுத்தி சோதனை செய்தார். அந்தக் காரை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்த நபர் ஓட்டி வந்தார். சோதனையில் ஒரு பண்டல் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில், உள்ளே போலீஸ் ஸ்டிக்கரும் கிடந்தது. நிலைமை கைமீறிச் சென்றதும் தப்பி ஓட முயன்ற அந்த நபரைப் பிடித்து விசாரிக்க, காரை ஓட்டி வந்த இளைஞர் ஹரிமுருகன் மதுரை மாவட்டம் கே.புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர் என்பது தெரிய வந்தது.

 

fire department person arrested in cannabis issue

 

மேலும், அவரைப் பிடித்து விசாரிக்கும்போது, அவருக்கு முன் கிளம்பிய மற்றொரு கார் பட்டுக்கோட்டை நோக்கி சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். தான் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்திலுள்ள தோப்பில் கஞ்சா பண்டல்களை இறக்கிவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் இழந்துவிட்டதால் அதனை மீட்க கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியவர், அவர்களது டீமில் நாட்டைக் காக்க வேண்டியவர்களே கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதன்பிறகு தனிப்படை போலீசார் ஹரிமுருகனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

மற்றொரு கார், கஞ்சா பண்டல்களுடன் தப்பிச் சென்ற தகவல் மைக் மூலம் அறிவிக்கப்பட்டு, வாகன எண்ணையும் தெரிவித்து மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்தனர். இந்த அறிவிப்பு வருவதற்கு 5 நிமிடம் முன்பு அந்த கார் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி.யைக் கடந்து சென்றது தெரிய வந்தது. அந்தக் கார் திருச்சிற்றம்பலம் சாலையில் புதுக்கோட்டை நோக்கி பயணிப்பதாகத் தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசாரும் எச்சரிக்கை செய்யப்பட, அங்கும் வாகன சோதனைகள் தொடங்கியது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வாகன சோதனை நடப்பதைப் பார்த்து அந்தக் கார் மாற்று மண் பாதையில் இறங்கி துளுக்க விடுதி முந்திரிக் காட்டுக்குள் சென்றுவிட்டது.

 

fire department person arrested in cannabis issue

 

மறுநாள் சனிக்கிழமை மதியம் மீண்டும் அந்த போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார், ஆவணம் மாரியம்மன் கோயில் முன்புள்ள சாலையில் வந்து பேராவூரணி சாலையில் ஏற முயன்றபோது, சாலையில் ஒரு கார் மற்றும் பைக் நின்றதால் அதற்குமேல் செல்லமுடியாமல் சாலையிலேயே நிறுத்திவிட்டு இருவர் இறங்கி ஓடுவதைப் பார்த்தனர் அப்பகுதி இளைஞர்கள். கைகாட்டியில் வாகன சோதனையில் இருந்த ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் சொல்ல விரைந்து வந்த போலீசார் கார் லாக்கை உடைத்துப் பார்த்தபோது 10 மூட்டைகள் இருந்ததைக் கைப்பற்றி ஆலங்குடி கொண்டுசென்று பிரித்துப் பார்த்தபோது 100 பண்டல்களில் 212 கிலோ கஞ்சா எடுக்கப்பட்டது.

 

தப்பி ஓடியவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கியில் பதுங்கியிருந்த தஞ்சை பிள்ளையார்பட்டி ஆறுமுகம் மகன் அஜித் குமாரை தஞ்சை தனிப்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்” என்கிறார்கள் விவரமறிந்த போலீசார்.

 

அதேபோல புதுக்கோட்டை நகருக்குள் கஞ்சா விற்பனை நடப்பதை அறிந்த எஸ்.பி.யின் சிறப்புப் படை போலீசார் காமராஜர்புரம் 31 ஆம் வீதியில் மணிகண்டன் (எ) கஜினி மணி, மாலையிடு விஜய் ஆகிய இருவரையும், அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா, ரூ.2000 பணம், 2 செல்போன்கள், தராசு, பேக்கிங் கவர்கள், 2 பைக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி தினம், தினம் கஞ்சா சில்லறை விற்பனை செய்பவர்கள் பலர் பிடிபட்டு வருகின்றனர். ஆனால் கஞ்சா விற்பனையும் குறையவில்லை, விற்பனையாளர்களும் குறையவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.