தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத 5 முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கப் போவதில்லை என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களுடன் பணியாற்றப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு முன் பணம் கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பிற்கு வராதது போன்ற பிரச்சனைகள் உள்ளன. அது சம்பந்தமாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதி இதை பேசித் தீர்ப்பதாகவும் கூறியுள்ளோம்.
நடிகர்கள் அடுத்தடுத்த படங்களுக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை முடித்து கொடுத்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். எங்களுக்கு ஒத்துழைக்கும் நடிகர்களுடன் நாங்கள் படம் தயாரித்துக்கொள்கிறோம். ஒத்துழைக்காத நடிகர்களுடன் படம் பண்ண மாட்டோம் என்பதை தீர்மானமாக கொண்டுவந்துள்ளோம்” என்றனர். மேலும் அந்த 5 நடிகர்கள் யார் என்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.