Skip to main content

‘அவரே இறந்துட்டாரு.. நானும் போறேன்...’ - திருமணமான ஆண் நண்பருக்காக பெண் உயிரிழப்பு

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

female victim for a married boyfriend

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான சந்திரசேகர். இவருக்கு  15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அனிதா என்ற மனைவியும் 1 பெண் பிள்ளை, 2  ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர் பெங்களூரில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். பெங்களூரில் வேலை செய்து வந்த போது 26 வயதான சுஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. சுஜாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தேவராஜ் என்ற கணவனும்,  2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் சுஜாவை வாணியம்பாடிக்கு அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து தங்கவைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சுஜா காணாமல் போனதாக அவருடைய கணவர் பெங்களூரில் உள்ள ஒயிட் ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சுஜாவை அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். 

 

இந்நிலையில் சுஜா வாணியம்பாடியில் இருப்பது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து சுஜாவை அழைத்து செல்ல அவருடைய குடும்பத்தினர் வாணியம்பாடிக்கு தேடிவந்து கண்டுபிடித்து அறிவுரைகளை வழங்கி அழைத்து செல்ல முயன்றனர். சுஜாவை அழைத்து செல்வது அறிந்து சந்திரசேகர் ஓடி சென்று  அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். பின்னால் ஓடிச்சென்ற குடும்பத்தார் அவரை காப்பாற்ற முயன்றனர். இந்த தகவல் அறிந்த சுஜாவும் அழுது கொண்டே ஓடிச்சென்று அங்குள்ள மற்றொரு கிணற்றில் குதித்துள்ளார். கணவன் மற்றும் பெற்றோர் பின்னாலேயே ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றனர். 

 

இரு குடும்பத்தினரும் கிணறுகளில்  குதித்து சந்திரசேகர் மற்றும் சுஜாவை தேடத்துவங்கினர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். 2 சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட உடலைப் பார்த்து அதிர்ச்சி தாங்க முடியாத சந்திர சேகரின் மனைவி, தாய் மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக 108  ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி கிராம போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.