Skip to main content

தந்தை மகன் தகராறு: ஆற்றில் குதித்து தற்கொலை செய்த மகன்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நிரம்பியதை தொடர்ந்து அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 1100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
 

இதனால் ஆற்றின் இரு கரைகளிலும் அதிக அளவு நீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றுப்பாலத்தின் மீது நடந்து சென்ற ஒரு நபர் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தார். 

 

இதை வேடிக்கை பார்த்த மக்கள், முதலில் அவர் ஏதோ சாகசம் செய்கிறார் என நினைத்தனர். பின்னர் நேரம் செல்ல செல்ல அந்த நபர்  நீரில் முழ்குவதை கண்ட பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலம், கொமரபாளையம் பவானி ஆற்றுப்படித்துறை மற்றும் சதுமுகை பகுதிகளில் உள்ள பவானி ஆற்றில் இறங்கி இரண்டு நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நபர் கிடைக்கவில்லை. 

 

river

 

 

நேற்று மாலை வரை கொமரபாளையம், ஆலத்துக்கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி தேடியும் உடல் கிடைக்கவில்லை. நேற்று மதியம் தீயணைப்பு வீரர்கள், சத்தியமங்கலம் போலீசார் மற்றும் மீனவர்கள் பரிசலில் சென்று தேடினர். பிறகு மாலை 5.30 மணியளவில் ஆலத்துக்கோம்பை பவானி ஆற்றில் உடல் மிதப்பதை கண்ட தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 

போலீசார் நடத்திய  விசாரணையில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி தங்கராஜ் என்பவரது 27 வயது மகன் யசோதரன் என்பதும் எம்டெக் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்ததாகவும் அடிக்கடி தந்தை மகன் இடையே சண்டை ஏற்பட்டுவந்ததாகவும் இதில் தொடர்ந்து  மன உளைச்சலில் இருந்த  யசோதரன் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

 

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டதாரி வாலிபர் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.    

 

சார்ந்த செய்திகள்