கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையின் மதகுகள் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், அணையின் நீர் முழுமையாகத் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. வரத்தாக உள்ள நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றுவதால் கழிவுகளுடன் கரு நிறத்தில் வெளியேறி வருகிறது.
ஓசூர் அடுத்த பாத்தக்கோட்டா, கனுசூர், பேட்டிகானப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் தென்பெண்ணை நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது மோட்டார் மூலம் நீர் பாய்ச்சும் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. துர்நாற்றத்துடன் கருநிறத்தில் நுரை பொங்கும் நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அணை பராமரிப்பு பணிகள் குறித்தும், நீர் வெளியேற்றம் குறித்தும் முன்கூட்டியே அறிவித்திருந்தால் மாற்று விவசாயத்திற்குத் தயாராகி இருப்போம் என்றும் புதினா, தக்காளி உள்ளிட்டவை தற்போது அதிக விலைக்கு விற்பனையாகும் நிலையில் துர்நாற்ற நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் பயிர்கள் கருகும் அபாயமும், நிலம் மாசடையும்’ என விவசாயிகள் அச்சம் தெரிவிப்பதால் அணையின் நீரால் விவசாயத்திற்கு பாதிப்பு இல்லையா என்பதை அதிகாரிகள் விளக்கிடக் கோரிக்கை விடுத்துள்ளனர்.